Skip to main content

மத்திய அமைச்சராகிறார் G.K.வாசன்?

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

 

 

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவும், அதிமுகவும் தங்களின் எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் திமுக திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்தது.

 

அதிமுகவில் இந்த பதவிகளை பெற கடும் போட்டி நிலவியது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமும் தங்களுக்கு மாநிலங்களவை பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது போல் தங்களுக்கும் அதிமுக ஒரு இடத்தை ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவும் அதிமுகவிடம் வலியுறுத்தி வந்தது. தேமுதிகவின் சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை இதுதொடர்பாக நேரிலும் சந்தித்துப் பேசினார்.

 

ஆனால் அதிமுகவிலேயே இந்தப் பதவிகளை பிடிக்க பலத்த போட்டி இருந்தது. கே.பி.முனுசாமி, தம்பிதுரை, விஜிலா சத்தியானந்த், தமிழ் மகன்உசேன், அன்வர்ராஜா உள்ளிட்டவர்களும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசனும் வெளியே எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இந்தப் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

 

இந்த நிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.

 


 

இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, தேமுதிகவும், தமாகாவும் ராஜ்யசபா சீட்டுக்காக முயற்சி செய்து வந்தது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரும் பாஜக தலைமையிடம் சிபாரிசு செய்திருக்கின்றனர்.

 

 

அவர்கள் இருவரின் சிபாரிசுகளைத் தட்டிக் கழிக்க முடியாத பாஜக தலைமை, வாசனுக்காக அதிமுகவிடம் ஒரு இடத்தைக் கேட்க நினைத்தது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருவதாலும், தமிழக சட்டமன்றத்தில் சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுமாறும் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை கடந்த 2ஆம் தேதி டெல்லி சென்று சந்தித்துள்ளனர்.

 

அப்போது, தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இதனை உங்களால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையா? குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமே இல்லை. இதில் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பிரதமர் மோடி தெளிவாக கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் போராட்டம் நடக்கிறது என்று அமித்சா கூறியிருக்கிறார்.

 

அதற்கு அதிமுக அமைச்சர்கள் இருவரும், தமிழக அரசின் முயற்சிகளை விளக்கிவிட்டு, எந்த சமாதானத்தையும் முஸ்லீம்கள் ஏற்காதநிலையில்தான் உங்களைச் சந்தித்து ஆலோசனை செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லியுள்ளனர்.

 

அதற்கு அமித்சா, தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்தில் உங்களோட சப்போர்ட் இருக்கு, போராட்டம் நடத்துங்க ஆனா எங்களை எதிர்க்காதீங்க என முஸ்லீம் லீடர்களிடம் சொல்லியிருக்கீங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. எதற்காக இந்த டபுள் கேம் என கடுமையாப் பேசியிருக்கிறார்.

 

அதற்கு அதிமுக அமைச்சர்கள் இருவரும், அனுமதி தரவில்லை என்றால் கோர்ட்டுக்கு போறாங்க. அப்புறம் அனுமதி வழங்க வேண்டிய நிலைமை வருது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வழி இல்லையா என கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமித்சா, அந்தச் சட்டத்துக்கு எதிரா நீங்க தீர்மானம் நிறைவேற்றினாலும், நிறைவேற்றாவிட்டாலும் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியா இருக்கணும். அதுல சரியாக இல்லை என்றால் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

 

இந்தச் சந்திப்பில் கடைசியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பேசப்பட்டது. அப்போது, வாசனுக்கு ஒரு மாநிலங்களவை பதவி தர வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. அதோடு, நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் அதிமுக மத்திய அமைச்சரவையில் இணையலாம், அதற்கு உங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா என்று கேட்டுச் சொல்லவும் என்று கூறியுள்ளார் அமித்சா.


 

modi - gk vasan



 

 

சென்னை திரும்பி அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் அமித்சா கூறியதை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாம் விசாரித்தபோது, மத்திய அமைச்சரவையில் தனது மகனை இணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். கனவு காண்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆதரவால் மத்திய அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று வைத்திலிங்கம் கனவு காண்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கக் கூடாது. இப்போது மத்திய அமைச்சரவையில் இணைந்தால் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க பாஜக நிர்பந்தம் தரும். ஆகையால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என நினைத்தாராம். ஆகையால்தான் மாநிலங்களவை வேட்பாளர்களில் இரண்டு பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்களயும், ஒருவர் வாசனையும் முடிவு செய்தாரம் எடப்பாடி பழனிசாமி.

 

வாசனுக்காக ஏற்கனவே குரல் கொடுத்த பிரணாப் முகர்ஜியும், குஜராத் தொழில் அதிபரும் தற்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது மத்திய அமைச்சராகிறார் வாசன் என்கின்றனர் தமாகாவினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.