Skip to main content

வெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன? ஜி.கே.மணி

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

 

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகளை இரத்து செய்ய வலியுறுத்தி அறிவித்திருந்த போராட்டத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த வாக்குறுதியை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி திரும்பப்பெற்றதை அரசியல் நாடகம் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

 

gkmani



5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு எந்தக் காலத்திலும் பொதுத்தேர்வுகளை நடத்தக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சுகமான, சுமையற்ற,  விளையாட்டுடன்கூடிய, தரமான, கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாடு ஆகும். இந்த நிலைப்பாடுகளில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதனால், தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை பா.ம.க. அறிவித்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள் தொடங்கி விட்ட நிலையில், அவற்றை ரத்து செய்ய இயலாது என்றும், அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார். இன்றைய சூழலில் இது தான் சாத்தியம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு போராட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் ரத்து செய்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அரசின் வாக்குறுதியை பெரிய வெற்றியாகவே கருதுகிறது.


 

 

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் துடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,   வழக்கம் போலவே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் விமர்சித்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனாலும், பொதுத்தேர்வுகளுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்து அரசிடமிருந்து வாக்குறுதியை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு வலிமையான எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்ளும் தி.மு.க., மாணவர்கள் நலன் சார்ந்த பொதுத்தேர்வு விவகாரத்தில் சாதித்தது என்ன?  
 

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை தடுக்கும் விசயத்தில் திமுக படுதோல்வியடைந்து விட்டது என்பதை அக்கட்சியின் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவரது அறிக்கையில் 3 இடங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். பொதுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று சட்டப்பேரவையில் உறுதியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னாளில் அந்த உறுதிமொழியை மீறி பொதுத் தேர்வை அறிவித்ததாக தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.


 

 

இப்படியொரு கருத்தைக் கூறுவதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். பேரவையில் ஓர் உறுதிமொழியை கொடுத்து அதை அமைச்சர் மீறினால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பேரவை விதிகளில் வழி உள்ளது. பொதுத் தேர்வை தடுக்கும் விசயத்தில் திமுகவுக்கு உண்மையான அக்கறை இருந்தால், உறுதிமொழியை மீறியதற்காக பேரவையில் தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கலாம். ஆனால், 100 உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக, பொதுத் தேர்வை தடுக்கும் விசயத்தில் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு  சிற்றுண்டியும், காஃபியும் வேண்டும் என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட கோரிக்கைகளையெல்லாம் வலியுறுத்திய திமுக உறுப்பினர்கள், பொதுத் தேர்வுக்கு எதிராக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக்கூட கொண்டுவரவில்லை. ஒன்றுமில்லாத விசயங்களுக்கெல்லாம் வெளிநடப்பு செய்த திமுகவினர், 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக ஒருமுறைகூட வெளிநடப்புச் செய்ததில்லை. அவ்வளவு ஏன்?... குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் சட்டையைக் கிழித்துக் கொண்டுகூட வெளியில் வரவில்லை.
 

சட்டப்பேரவையின் முதன்மை எதிர்க்கட்சி திமுக தான். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக  குரல் கொடுப்பதைவிட, விளம்பரம் தேடுவதில்தான் திமுக அதிக கவனம் செலுத்துகிறது. மாறாக, பாட்டாளி மக்கள் கட்சிதான் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது. பொதுத் தேர்வு விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பெற்ற வாக்குறுதியை விமர்சிக்கும் திமுகவுக்கு உண்மையாகவே மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தமிழகமே அதிரும் வகையில் போராட்டம் நடத்தி நடப்பாண்டிலேயே பொதுத் தேர்வை ரத்து செய்ய வைக்கட்டும். அவ்வாறு செய்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும். அதைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம் என்று திமுக ஒப்புக்கொள்ளுமா? என்பதை தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.