கடலூர் அடுத்த தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் குண்டு உப்பலவாடியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் தம்பி மதிவாணன் (36).கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனா, அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி சாந்தி ஆகியோர் போட்டியிட்டனர். சாந்தி வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக ஆனார்.

Advertisment

இந்த தேர்தல் காரணமாக இரு தரப்பினர் இடையேயும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் கடுமையாக தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணயளவில் மாசிலாமணியின் தம்பியான மீனவர் மதிவணன் கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரண்டு கிராமத்திற்கும் இடையே அவர் சென்று கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டை, அரிவாள், இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் வழிமறித்தது. அதனால் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு மதிவாணன் தப்பி ஓடியபோது துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மதியழகன் ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலைகுடோன்களுக்கு தீவைத்தனர். மேலும் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

Advertisment

இதுபற்றி தகவலறிந்ததும் கடலூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், மாருதி வேன், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் எழிலரசன் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பிக்கள், 7 டி.எஸ்.பிக்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வாளர்கள் என விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மதிவாணனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்தல் முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதும், அதனைத்தொடர்ந்து படகுகள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டதும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.