chennai high court

கடந்த 2006 முதல் முதல் 2011-ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அந்தசிறுமியை முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட, அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisment

இதனையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 6 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் திறக்கப்பட்ட, எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வந்த வழக்கில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 42,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர்,சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு, எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.