Skip to main content

"முதல்நாள் வெற்றி, முழுவதும் தொடரும்!" - மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

mkstalin


“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, கிராம/வார்டுசபைக் கூட்டங்களின், முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! முதல் நாள் வெற்றி, முழுமையான வெற்றி; இந்த வெற்றி, தொடர்ந்து எப்போதும் நம்முடையதே! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், "முதல்நாள் வெற்றி, முழுவதும் தொடரும்!"


நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.


“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளில் நடைபெறும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களின் தொடக்க நாளான நேற்று (டிசம்பர் 23), பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் திருப்பெரும்புதூர் (தெற்கு) ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றேன்.


கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியெங்கும் மக்களின் சிறப்பான, எழுச்சி மிகு வரவேற்பு. அது தனிப்பட்ட முறையில் எனக்கானது என்று நான் எண்ணவில்லை. தமிழக மக்கள் மிகத் தெளிவான முடிவுடன், ஆட்சி மாற்றத்தை உருவாக்கிடத் தயாராக இருக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில், அவர்களுடைய  எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய இயக்கம், தி.மு.கழகம்தான் என்பதில் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அழகிய வெளிப்பாடுதான் மக்கள் தந்த மனமார்ந்த வரவேற்பு.


ஊருக்குள் நுழைகின்றபோது, ஒரு கல்வெட்டைக் கவனித்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லவர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுகள் உண்டு. முடியாட்சியிலும் ஊராட்சி ஜனநாயகம் காத்த சோழர் காலத்துக் கல்வெட்டுகள் உண்டு. ஆனால், நான் பார்த்த கல்வெட்டு என்பது, தமிழகத்தின் இருண்ட காலமான அ.தி.மு.க. ஆட்சியின் கல்வெட்டு. அதுவும் ஊழலில் உச்சம் தொடுவதில், மற்ற துறைகளுடன் போட்டி போடும் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், விளையாட்டுத் திடல் அமைப்பதற்காக, நாட்டப்பட்ட கல்வெட்டு. 2018ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2019 ஆம் ஆண்டிலே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கைப்பந்து - கபடி - பூப்பந்து மைதானங்கள் அமைப்பதற்கான கல்வெட்டு மட்டும்தான் இருக்கிறது; மைதானங்களைக் காணவில்லை. முதலமைச்சர் தொடங்கி, ஒவ்வொரு அமைச்சரும் ஆடிய ஊழல் சடுகுடு விளையாட்டுகளால், தமிழகத்தையே துடைத்துப் பொட்டல் திடலாக்கிவிட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், எப்படி விளையாட்டுத் திடலைக் கட்டுவார்கள்?


பொய் வாக்குறுதிகள் - புரட்டுத் திட்டங்கள் - பெட்டி பெட்டியாய்க் கொள்ளை என, ஏறத்தாழ பத்தாண்டுகளாகத் தமிழகத்தை, தொடர்ந்து இருளில் தள்ளியவர்களை, தேர்தலின் மூலம் வெளியே தூக்கி எறிய வேண்டும் என்பதே, குண்ணம் முதல் குமரிவரை தமிழகத்தின் அனைத்துப் பகுதியில் உள்ள மக்களின் ஒரே தீர்மானமான எண்ணமாக இருக்கிறது. அதன் அர்த்தம் நிறைந்த வெளிப்பாடுதான், உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் தந்த வாஞ்சைமிகு வரவேற்பு.


கிராசபை/வார்டுசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவித்து இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில், மக்களை நோக்கிக் கழக நிர்வாகிகள் எந்த அளவில் என்ன வேகத்தில் பயணித்திருக்கிறார்கள் என்பதை அறிய, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மேற்கொண்டிருந்த பணிகள் எடுத்துக்காட்டின. கிராமசபைக் கூட்டம் குறித்து, ஊர் மக்களிடம் எடுத்துரைத்து, துண்டறிக்கைகளை வழங்கி, தீர்மானத்தை விளக்கி, கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொப்பி உள்ளிட்டவற்றை அளித்து, மிகச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்திருந்தார்.


எளிமையான முறையிலும் - இயற்கையான, இயல்பான வகையிலும் தொடங்கிய குண்ணம் கிராமசபைக் கூட்டத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கேற்றிருந்தது, மக்களின் மன ஓட்டத்தையும், கழகத்தின் வலிமையையும், பொலிவு பொங்கிடப் புலப்படுத்துவதாக இருந்தது. உங்களில் ஒருவனான நான் - அவர்களில் ஒருவனாக சரளமாக உரையாடினேன். நான் பேசினேன் என்பதைவிட, அவர்கள் பேசியதைக் கேட்டேன்; கருத்தொன்றிக் கவனித்தேன்; மன ஏட்டில் எழுதிப் பதிய வைத்துக்கொண்டேன் என்று சொல்வதுதான், பொருத்தமாக இருக்கும்.


கஜேந்திரன் என்ற வயது முதிர்ந்த விவசாயி, தனது கருத்துகளைத் தெரிவிக்கும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் படுகின்ற வேதனைகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தவர், எல்லாவற்றுக்கும் காரணம் “மினிஸ்டர் டெண்டர்கள்”தான் என்றார். மூடி முத்திரையிடப்பட்ட டெண்டர், இ- டெண்டர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோமே, அது என்ன மினிஸ்டர் டெண்டர் என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவரிடம் நான் கேட்டபோது, “அ.தி.மு.க. அமைச்சர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே கொடுக்கின்ற டெண்டர்தான் மினிஸ்டர் டெண்டர்” என்றார். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எப்படி வகை வகையாகக் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை, கிராமத்து மக்கள் எத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு கஜேந்திரனின் வார்த்தைகள் சாட்சியாக இருந்ததைப் பார்க்க வியப்பு மேலிட்டது.


அவரைப் போலவே விவசாயி ஞானசேகரனும் இந்த ஆட்சியால் படும் துன்பங்களை எடுத்துரைத்தார். பாரதிவரதன் என்பவர் கழக ஆட்சியில் கிடைத்த வேலை வாய்ப்புகளையும், அ.தி.மு.க ஆட்சியில் வாய்ப்புகள் பறிபோயிருப்பதையும் எடுத்துக் காட்டினார். விளையாட்டு மைதானத்திற்காகக் கல்வெட்டு மட்டும் நட்டுவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துவிட்ட ஆளுங்கட்சியினர் பற்றியும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், பார்த்திபன் என்பவர் எடுத்துச் சொன்னார்.


மருத்துவர் ஓவியா அவர்கள், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். முதல் கோரிக்கை, குண்ணத்தில் ஆரம்பசுகாதார நிலையம் இல்லை என்பதையும், அவசர சிகிச்சைக்காக 10 கி.மீ. தூரம் சென்றாலும் அங்கும் சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் - செவிலியர்கள் இல்லை என்பதாகும். அவரிடம் மினி கிளினிக் திறப்பு பற்றிக் கேட்டேன். மினி கிளினிக் என்பதைப் பெயருக்குத்தான் அறிவித்திருக்கிறார்கள் என்பதையும், அங்கும் டாக்டர் இல்லை என்பதையும் சொல்லி, மினி கிளினிக் திட்டத்தின் பெயரால், காசு மட்டும்தான் எடுத்திருக்கிறார்கள் என்றார். தலைவர்  கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் எந்த அளவு மக்களின் உயிர் காத்தது என்பதையும், தற்போதைய காப்பீட்டுத் திட்டம் மக்களின் உயிரைக் காவு வாங்குவதையும் எடுத்துரைத்தார்.
 

cnc


அடுத்த கோரிக்கையாக, நுழைவுத் தேர்வை ரத்துசெய்த தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியினால் அவர் பல் மருத்துவம் படித்ததையும், தன்னைப் போலப் பலரும் மருத்துவர்களானதையும் எடுத்துக்கூறி, நீட் தேர்வை முதன் முதலாக அனுமதித்த எடப்பாடி அ.தி.மு.க அரசினால் - லட்சக்கணக்கில் பயிற்சி வகுப்புக்காகச் செலவு செய்ய வேண்டியிருப்பதையும் - எல்லோராலும் அது இயலாது என்பதால்-மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்து, சமையல்காரர் வீட்டுப் பிள்ளைகள் சமையல்காரர்களாகவும், தூர் வாருகிறவரின் பிள்ளைகள் தூர்வாரவும் வேண்டும் என்ற பரிதாபமான நிலையை உருவாக்கிவிட்டார்கள் என்பதையும் சொன்னார். கல்விக்கடனைக் கட்டுவதா, நீட் தேர்வுப் பயிற்சிக்குச் செலவு செய்வதா, சீட் கிடைத்தாலும் அதற்காகத் தனியார் கல்லூரிக்கான கட்டணத்தைச் செலுத்துவதா எனக் கேட்டதுடன், உங்களில் ஒருவனான என் செயல்பாடுகளை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கூர்ந்து கவனிப்பதாகவும் கூறினார்.


மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீட்டுத் தீர்மானத்தைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என கழகத் தலைமை வலியுறுத்தினால், அரசாங்கம் அதனை நிறைவேற்றுகிறது. கல்லூரிகளைத் திறந்தால் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் என உங்களில் ஒருவனான நான் அறிவித்தால், அதற்கடுத்த இரண்டு நாளில் கல்லூரித் திறப்பை அரசு கைவிடுகிறது என்பதை மிக உன்னிப்பாகக் கவனித்துத் தெரிவித்த டாக்டர் ஓவியா, “கவர்மெண்ட் ஸ்கூலில் படித்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களால் கட்டணம் செலுத்த இயலவில்லை என்றால் அதனை தி.மு.கழகமே செலுத்தும் என்று நீங்கள் அறிவித்ததும், உடனே அவங்க சைடிலிருந்து அரசாங்கமே கட்டணம் செலுத்தும்ங்கிறாங்க. இப்படி ஒவ்வொன்றையும் நீங்க சொல்லி அவங்க செய்றதுக்கு, நீங்களே முதலமைச்சராக வந்தால் இன்னும் அதிகமாக மக்களுக்குச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். இதே நம்பிக்கையைத்தான் குண்ணம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ப்ரியா, விக்னேஷ், ராஜேந்திரன், ரேவதி உள்ளிட்டோர் தங்கள் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக எடுத்துரைத்தனர். அவர்களின் குரலில், பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பட்டபாட்டின் வேதனை பளிச்செனத் தெரிந்தாலும், அடுத்து அமைய இருப்பது தி.மு.கழக ஆட்சிதான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒளிர்ந்தது.


அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதியினை அவர்களுக்கு அளித்ததுடன், அதற்கு வழியமைக்க வேண்டுமென்றால், ஊழலில் திளைத்துள்ள “அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்பதை, பத்து முழக்கங்களை முன்வைத்து எடுத்துரைத்தேன்.


•விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•வேலையில்லாமல் திண்டாடவிட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•தாகத்தில் தவிக்கவிட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•கஜானாவைச் சுரண்டி காலி செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•கல்வியையும் சுகாதாரத்தையும் தரம் இழக்கச் செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•பெண்களின் உரிமைகளைப் பறித்திட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•சமூகநீதியைச் சிதைத்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•தமிழர்களின் பெருமைகளைச் சீரழித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


•ஆட்சி செய்யத் தகுதியற்ற அ.தி.மு.க.வை நிராகரிப்போம்


இந்தப் பத்து முழக்கங்களையும் அங்கே திரண்டிருந்தோர் ஒட்டுமொத்தமாக முழங்க, மக்களின் ஏகோபித்த குரல் ஒலியுடன், “அ.தி.மு.கவை நிராகரிப்போம்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த பதாகையில், அதற்கான கையெழுத்திடுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மக்களோடு மக்களாக உங்களில் ஒருவனான நானும் அதில் கையெழுத்திட்டேன்.


கிராமசபைக் கூட்டம் நிறைவடைந்தாலும் அந்த கிராம மக்களின் பேரன்பு மிக்க வரவேற்பு நிறைவடையவில்லை. தொடர்ந்து  தங்கள் அன்பைச் செலுத்திய வண்ணம் இருந்தனர். 


குண்ணத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம/வார்டு சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலூர் மத்திய மாவட்டம் பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பட்டி ஊராட்சியில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களும், திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் நடக்குத்தகை ஊராட்சியில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், திருச்சி மத்திய மாவட்டம் இலால்குடி ஒன்றியம் பெருவிளநல்லூர் ஊராட்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் பங்கேற்ற கிராம/வார்டு சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதுபோலவே, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் என அனைத்து  நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் கிராம/வார்டு சபை கூட்டங்களைத் தொடங்கி, தொடர்ந்து நடத்துகின்றனர். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டுள்ள கழக நிர்வாகிகளும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் ஓங்கி ஒலித்த குரலைக் கேட்டறிந்தனர்.


கழகத்தின் தலைமை நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரிடமும் அலைபேசி வழியாகப் பேசி, கிராம/வார்டு சபைக் கூட்டங்கள் எப்படி நடந்தன என்பதை விசாரித்தறிந்தேன். அத்தனை பேரும், மக்கள் அளித்த பேராதரவை மகிழ்ச்சி பொங்கச் சுட்டிக்காட்டினர். ஆட்சி மாற்றத்துக்குக் கழகத்தினரையும் மிஞ்சும் வகையில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கூறினர்.


16ஆயிரம் ஊராட்சிகளுக்கான கிராம/வார்டு சபைக் கூட்டங்களில் முதல்நாளான டிசம்பர் 23 அன்று மட்டும், 1166 கூட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றுள்ளன. இதில் பங்கேற்றும், இணையம் வழியாகவும், “அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை ஆதரித்திருப்போரின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் பேர். ஏறத்தாழ 10ஆயிரம் புதிய உறுப்பினர்கள் முதல் நாளில் கழகத்தில் இணையும் ஆர்வத்துடன் அலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

nkn


முதல்நாளில் மட்டும் நேரடியாக 30 லட்சத்து 40 ஆயிரம் மக்களும், இணைய வழியாக 1 கோடியே 80 லட்சம் பேரும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களைக் கவனித்துள்ளனர். மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பேரைக் கடந்துள்ளது.


நாளை இதேபோல திண்டிவனம் தொகுதி மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் வார்டுசபைக் கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன்.


விடியலுக்கான தொடக்கப்புள்ளியாகவும், வீணர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்துள்ள இந்த கிராம/வார்டு சபை கூட்டங்களின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மக்கள் தந்த மனமார்ந்த பேராதரவாகும். அந்த ஆதரவு நீடித்திடவும், நிலைத்திடவும் ஜனவரி 10 வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியது கழகத்தினரின் கடமையாகும். 16ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளிலும் கிராம/வார்டுசபைக் கூட்டங்களை முழுமையாக நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டிட வேண்டும்.


அ.தி.மு.க.வை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து  நாமும் தொடர்ச்சியாகப் பயணிப்போம். நம்மை விட ஆர்வமாக உள்ள அவர்களின் ஆட்சி மாற்றக் கனவை நிறைவேற்றுவோம். கிராம/வார்டுசபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! முதல் நாள் வெற்றி, முழுமையான வெற்றி; இந்த வெற்றி, தொடர்ந்து எப்போதும் நம்முடையதே! இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.