Skip to main content

தமிழகத்தின் கஜானா காலி... முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும்... மு.க.ஸ்டாலின்

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், கஜானாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

“சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், நிதியமைச்சராகவும் - துணை முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

mk stalin



ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போது, “ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற “ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழா”விற்கு அன்றைய  நிதியமைச்சர் திரு. ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை” என்று அ.தி.மு.க. அரசு செய்திக் குறிப்பே வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தது.
 

“மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வலுவுள்ள நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது” என்று சட்டப் பேரவையில், எடப்பாடி திரு. பழனிசாமி அரசின் 8.1.2018 அன்றைய ஆளுநர் உரையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே உரையில், “இந்தச் சட்டம் மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்” என்றும் புகழாரம் சூட்டப்பட்டது.


 

ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறைவேற்ற முனையும் போது - அ.தி.மு.க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித்  தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி - “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண்டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது.
 

ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

அந்தத் தொகை பெறப்பட்டதா?

ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?

அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு?

நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?

- எது பற்றியும் அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது!
 

தற்போது, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், “ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரியும்” மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ!
 

எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.


 

“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசிமுறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி திரு. பழனிசாமி.
 

ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் - ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.