Skip to main content

களத்திற்குத் தயாராகும் இபிஎஸ்; ஏப்ரல் 20ல் முக்கிய ஆலோசனை 

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Field-ready EPS; Important consultation on 20th April

 

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி மாநகரில் வரும் 24 ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவும், அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 ஆம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவாக வரும் 24 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள்” எனக் கூறியிருந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், கே.சி.பழனிசாமி போன்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள். மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார். சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார். 

 

ஏப்ரல் 16 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “மதுரை மாநாடு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும். அதிமுக மாநில மாநாடு 20/8/2023 அன்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை திரும்பிப் பார்க்கும் படியாக அந்த மாநாடு அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” எனக் கூறியிருந்தார்.

 

ஓபிஎஸ் தரப்பு, நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு தனது தரப்பினை வலுப்படுத்தவும் தொண்டர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பலத்தினை காட்டவும் இந்த முப்பெரும் விழா நடத்தப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தென் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் அங்கு அதிமுகவின் பலத்தைப் பெருக்கவும் மாநாட்டிற்காக மதுரையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரது அடுத்தடுத்த திட்டங்களும் நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டே இருக்கும் என்பதும் அவை எவ்வாறாக அமையும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்.20 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.