Skip to main content

"எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தவில்லை!" - எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
edapadi

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார். 


டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 


''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண்டர் நடைபெறுகிறது,'' என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 


அவரிடம், உங்கள் சம்பந்தியான ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு மட்டும்தான் அதிகளவில் சாலைப்பணிகள் ஒப்பந்தம் விடப்படுகிறதே? என்று கேட்டதற்கு,


''நீங்கள் குறிப்பிடும் நபர் எனக்கு சம்பந்தி ஆவதற்கு முன்பே அவருக்கு நிறைய சாலைப்பணிகள் டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போதே, ராமலிங்கம் அன் கோ நிறுவனத்திற்கு பத்து சாலைப்பணிகள் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் தரப்பட்டு உள்ளது. 


அந்த நிறுவனம் 35 ஆண்டுகளாக பல்வேறு ஒப்பந்த பணிகளை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் எடுத்து செய்து வருகிறது. தகுதியின் அடிப்படையில்தான் இதுபோன்ற பணிகள் ஒப்பந்தம் விடப்படுகிறது.    மற்றபடி ஆளுங்கட்சியினரை குறிவைத்து வருமானவரித்துறை ரெய்டு நடப்பதாக தெரியவில்லை. முறையாக வரி செலுத்தியிருந்தால் வருமானவரித்துறையினர் விட்டுவிடுவார்கள். ரெய்டு, திட்டமிட்டு நடத்தப்படுவதாக நினைக்கவில்லை,'' என்றார்.


தொடர்ந்து அவரிடம் எட்டு வழிச்சாலைக்கு அவசரம் காட்டுவது ஏன் என்றும், நிலம் கொடுக்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதே என்று கேட்டோம்.


அதற்கு எடப்பாடி பழனிசாமி, ''மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் 17 சாலைப்பணிகளுக்காக 3050 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் எட்டுவழிச்சாலைக்கு எதிராக பிரச்சாரம் செய்கினறன.


நாங்கள் எந்த விவசாயியையும் கட்டாயப்படுத்தவில்லை. சில விவசாயிகளைத்தவிர, 90 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்துக்காக நிலம் கொடுக்க ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு 66 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதில் இருந்து இரண்டரை மடங்குக்கு மேல் இழப்பீடு கிடைக்கும் என்பதால் அவர்கள் யாரும் இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. வீடு பாதிக்கப்பட்டால் நிலம் கொடுத்து இலவசமாக வீடும் கட்டிக்கொடுக்கிறோம். தென்னை மரங்களுக்கும் வயதைப் பொறுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.


மத்திய அரசிடம் நாங்கள் கேட்டதற்கிணங்க எட்டு வழிச்சாலைத்திட்டம் கிடைத்துள்¢ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டதால் இந்த சாலைப்பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் 2.57 கோடி வாகனங்கள் உள்ளன. இந்த திட்டம் நிறைவடைய 5 ஆண்டுகள் ஆகும். அப்போது இன்னும் 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். அதற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சாலை போடப்படுகிறது. இதன்மூலம் நிறைய தொழில் முதலீடுகள் வரும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்,'' என்றார்.


அவரிடம் நீங்கள் குறிப்பிடும் 2.57 கோடி வாகனங்கள் பட்டியலில் 2 கோடி வாகனங்கள் இருசக்கர வாகனங்கள்தான். மிகக்குறைந்த அளவில்தான் கனகர சரக்கு வாகனங்கள் உள்ளன. அவற்றுக்காக எதற்கு எட்டுவழிச்சாலை? என்று கேட்டோம். 


இல்லை. முந்தைய காலங்களைவிட 27 லட்சம் கனரக வாகனங்கள் பெருகியுள்ளன என்றவர், மேற்கொண்டு அதைப்பற்றி பேச மறுத்துவிட்டார்.   மேலும் அவரிடம், ''மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படுமா?,'' என்றோம்.


அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் நாகப்பட்டினம் வரை செல்கிறது. இந்த வழித்தடம் அனைத்தும் சமவெளி பகுதியாக இருப்பதால் எங்கேயும் நீரைத் தேக்குவதற்கு ஏற்ப தடுப்பு அணைகள் கட்ட முடியவில்லை. மேட்டூர் அணை உபரி நீரை சேமிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்,'' என்றார். 


எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிலரைத்தவிர பெரும்பாலானோர் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை தருகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.