
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. எழிலன் இன்று (20.06.2025) மாலை 05.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கீழடி அகழாய்வுக்கு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்துப் பேசுகையில், “சட்டமன்றத்தில் வெளிப்படையாக முதல் முறையாக கீழடி ஆய்வை பற்றி வெளிக்கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு தவறான தகவலை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது 55 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அதே போன்று முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அதிமுக ஆட்சியின் 105 கோடி ஒதுக்கியதாகக் கூறுகிறார். கடந்த 2016இல் இருந்து 2021 வரைக்குமான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 இடங்களில் அகழாய்வு செய்ய நிதி ஒதுக்கினார்கள். ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டரை பெரும்புதூர் 55 லட்சம் ரூபாய்க்கான அகழாய்வும், கீழடிக்கு 55 லட்சம் ரூபாய்க்கு என அகழாய்வு செய்துள்ளனர். ஆனால் கீழடிக்கு மட்டும் 105 கோடி ரூபாய் செலவு செய்ததாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று பல்வேறு தருணத்திலும், பட்ஜெட் ஆய்வறிக்கையிலும், தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சொன்னதைத் திருப்பி சொல்கிறேன்.
கடந்த 2021இல் கீழடி சிவக்களை, கங்கைக்கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொற்கை, ஆதிச்சநல்லூர், கொடுமணலில் அகழாய்வு செய்துள்ளோம். இதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022இல் கீழடி அதோடு சிவக்களை, கங்கைக் கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பகோட்டை, துளுக்கர்பேட்டை, பெரும்பாலை என 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2023இல் கீழடி, கங்கைக்கொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை, துளூர்கர்பேபட்டை, பொற்பனைக்கோட்டை, பட்டறைபெரும்புதூருக்கு 5 கோடி ஒதுக்கப்பட்டது. 2024இல் மரங்கனூர், கொங்கல் நகரத்தையும் சேர்த்து 5 கோடி ஒதுக்கப்பட்டது.
2025இல் கீழடி உட்பட்ட அனைத்து இடங்களும், அதோடு வெள்ளலூர், ஆதிச்சநல்லூர் சேர்த்து 7 கோடி ரூபாய் என மொத்தம் 2021இல் இருந்து 2024 வரைக்கும் 30 இடங்களில் ஆய்வு செய்து 38 இடங்களில் தமிழக அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு மொத்தம் 27 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த அதிமுக அரசு எங்கே?. 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த திராவிட மாடல் அரசின் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.