ADVERTISEMENT

“அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் எனப் பெயரிட வேண்டும்” - செந்தில் குமார் எம்.பி

05:37 PM Jul 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊழல் செய்தவராக இருந்தாலும் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பா.ஜ.க.வில் இணைந்தால், அவர்கள் புனிதராகி விடுவார்கள். சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான அகன்ற தொடுதிரை தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது.

இதில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று பள்ளிகளுக்கும், தருமபுரி மாவட்டத்தில் ஏழு பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கான அகன்ற தொடுதிரை கொண்ட தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுக்கான தொடுதிரையைத் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்களிடம் எம்.பி. செந்தில்குமார் உரையாடினார். அப்போது மாணவர்கள், “கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளோம். அந்த பயிற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான மெத்தை இல்லை. அதை வாங்கித் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கோலூன்றி உயரம் தாண்டுதல் பயிற்சி மேற்கொள்வதற்குத் தேவையான மெத்தையைத் தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக எம்பி செந்தில்குமார் உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. செந்தில்குமார், “கடந்த சில நாட்களாக ஒன்றிய பாஜக அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணையவிடாமல் தடுத்து, நீர்த்துப் போகச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகளை அடிபணிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை அமலாக்கத்துறை 500க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 120 வழக்குகள் மட்டுமே தண்டனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தற்பொழுது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. ஒருவர் மீது எந்த ஒரு புகாரும் இல்லை என்றாலும் கூட, சோதனை நடத்தலாம். அதன் பிறகு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். தற்பொழுது தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் எனப் பெயர் சூட்டலாம். ஏனென்றால் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் கூட, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பாஜகவில் சேர்ந்தால், அவர்கள் புனிதராவார். எவ்வளவு ஊழல் செய்தவர்களைக் கூட அமலாக்கத்துறை தூய்மைப்படுத்தி விடுமாம். அதன் பிறகு பாஜகவில் இணைகின்ற போது மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கியது போல், பல்வேறு பதவிகள் கிடைக்கிறது. இதெல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை சட்டத்துறை மிகவும் வலிமையானது இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.

ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே இது எல்லாமே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சிதைக்கும் நோக்கில் பாஜக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் இருக்கிறார். இல்லையென்றால் அவரை டெல்லிக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுது வேறு மாதிரியான நடவடிக்கைகள் இருந்திருக்கும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு இந்த மாதிரியான திட்டங்களையே பாஜக அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தம் உள்ளவர்களிடம் அவர்களால் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது.

ஓபிஎஸ், தினகரன் இருவரையும் பாஜக எவ்வாறு இயக்குகிறது என்பதை பொறுத்து அவர்களின் அணி செயல்பாடு இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் அவரது ஆளுமையை வெளிப்படுத்தி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு பாஜகவினர் திட்டமிடுகின்றனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். ஆகையால் அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு தயக்கம் காட்டி வருகிறது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT