Skip to main content

“அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் எனப் பெயரிட வேண்டும்” - செந்தில் குமார் எம்.பி

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

"Executive Department should be named Washing Machine" - Senthil Kumar MP

 

ஊழல் செய்தவராக இருந்தாலும் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பா.ஜ.க.வில் இணைந்தால், அவர்கள் புனிதராகி விடுவார்கள். சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான அகன்ற தொடுதிரை தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. 

 

இதில்  மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று பள்ளிகளுக்கும், தருமபுரி மாவட்டத்தில் ஏழு பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கான அகன்ற தொடுதிரை கொண்ட தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுக்கான தொடுதிரையைத் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார் தொடங்கி வைத்தார். 

 

தொடர்ந்து மாணவர்களிடம் எம்.பி. செந்தில்குமார் உரையாடினார். அப்போது மாணவர்கள், “கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளோம். அந்த பயிற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான மெத்தை இல்லை. அதை வாங்கித் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர். 

 

இதனையடுத்து கோலூன்றி உயரம் தாண்டுதல் பயிற்சி மேற்கொள்வதற்குத் தேவையான மெத்தையைத் தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக எம்பி செந்தில்குமார் உறுதி அளித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. செந்தில்குமார், “கடந்த சில நாட்களாக ஒன்றிய பாஜக அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணையவிடாமல் தடுத்து, நீர்த்துப் போகச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

 

எதிர்க்கட்சிகளை அடிபணிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை அமலாக்கத்துறை 500க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 120 வழக்குகள் மட்டுமே தண்டனைக்கு கொண்டு வந்துள்ளது. 

 

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தற்பொழுது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. ஒருவர் மீது எந்த ஒரு புகாரும் இல்லை என்றாலும் கூட, சோதனை நடத்தலாம். அதன் பிறகு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். தற்பொழுது தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

 

அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் எனப் பெயர் சூட்டலாம். ஏனென்றால் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் கூட, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பாஜகவில் சேர்ந்தால், அவர்கள் புனிதராவார். எவ்வளவு ஊழல் செய்தவர்களைக் கூட அமலாக்கத்துறை தூய்மைப்படுத்தி விடுமாம். அதன் பிறகு பாஜகவில் இணைகின்ற போது மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கியது போல், பல்வேறு பதவிகள் கிடைக்கிறது. இதெல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை சட்டத்துறை மிகவும் வலிமையானது இதனை சட்டப்படி எதிர்கொள்வோம். 

 

ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே இது எல்லாமே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சிதைக்கும் நோக்கில் பாஜக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் இருக்கிறார். இல்லையென்றால் அவரை டெல்லிக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுது வேறு மாதிரியான நடவடிக்கைகள் இருந்திருக்கும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு இந்த மாதிரியான திட்டங்களையே பாஜக அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தம் உள்ளவர்களிடம் அவர்களால் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது.

 

ஓபிஎஸ், தினகரன் இருவரையும் பாஜக எவ்வாறு இயக்குகிறது என்பதை பொறுத்து அவர்களின் அணி செயல்பாடு இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் அவரது ஆளுமையை வெளிப்படுத்தி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு பாஜகவினர் திட்டமிடுகின்றனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில்  பாஜக ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். ஆகையால் அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு தயக்கம் காட்டி வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.