Skip to main content

“இங்கு வராதவர்களுக்கு இனி இடமில்லை..” - ஓ.பி.எஸ்-ஐ நீக்கச் சொல்லும் தங்கமணி

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Ex Minister Thangamani speech at ADMK General body meeting

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. 

 

இதில் முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர், “தொண்டர்களால் நடத்தப்படுகின்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தாலும், நிரந்தரப் பொதுச்செயலாளராக, ஒரு சாமானியனாக, எம்.ஜி.ஆரின் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையோடு, அனைவரையும் அரவணைத்து செல்லும் பொறுப்பேற்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும். அதற்கு வலிமைமிகு தலைமை எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கின்ற ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி. 

 

இந்தப் பொதுக்குழுவை நடத்தக்கூடாது, எப்படியாவது நிறுத்தவேண்டும். இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவில் வளர்ந்தவர்கள், அதிமுக அழிந்துவிடும் என்று காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அழிகின்ற காலம் விரைவில் இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

 

இங்கு பொதுக்குழு நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்) இங்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கருத்து சொல்லவேண்டும் என்றால் இங்கு வந்துசொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கோடாரியை எடுத்து சென்ற தலைமை அலுவலகத்தை இடித்து உள்ளே செல்கின்றனர். அவர் உண்மையான அதிமுக தொண்டனா? எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக இருந்ததால் எடப்பாடி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அந்த பொறுப்புக்கு வரவில்லை என்றால், இந்த இயக்கமே அழிந்துவிட வேண்டும் என்பதற்காக இன்று அவர்கள் திமுகவின் துணையோடு நடத்தும் நாடகத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. 

 

கொடநாடு வழக்கு எடப்பாடியே அதனை கண்டுபிடித்து முடியும் தருவாயில்; ஆட்சி மாற்றத்தின் காரணமாக; இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் எனும் காரணத்திற்காக அவர்கள் இந்த வழக்கை  எடுத்து நடத்துகிறார்கள். மேலும், இங்கு இருக்கின்ற நம் அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களும் அதனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், இவர்களெல்லாம் அதிமுகவின் தொண்டர்களா? 

 

அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் வாயிலாக நான் ஒரு கோரிக்கை வைக்கின்றேன், இவ்வளவு துரோகம் செய்தவர்,  காட்டிக்கொடுப்பவர்கள் இந்தக் கட்சிக்கு தேவையா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். 

 

இது வெறும் ஆரம்பம் தான். எடப்பாடியின் எக்ஸ்பிரஸ் துவங்கிவிட்டது. அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வென்று, செங்கோட்டையை அடையும். அதேபோல், அவர் தலைமையில் 2026ல் ஜார்ஜ் கோட்டையை அடையும். இங்கு வந்தவர்களுக்கு மட்டுமே இனி இந்த எக்ஸ்பிரஸில் இடம்; மற்றவர்களுக்கு இடமில்லை” என்று பேசினார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.