Skip to main content

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை கிண்டலடித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

evks elangovan talks about erode south district congress committee leader 

 

நேற்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

 

இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியபோது, "வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது முற்றிலும் உண்மை. மக்களிடம் வாக்குகளைப் பெற முடியாத பாஜகவினர் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். பாஜகவினர் அதிமுகவிற்கு செல்வதும், அதிமுகவினர் பாஜகவிற்கு செல்வதும்  இரு கட்சிகளும் பேரழிவை சந்திக்கிறது என்பதை காட்டுகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மா.பா. பாண்டியராஜன் எதற்காக தவறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று தெரியவில்லை. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சீமான், அண்ணாமலை போன்றோரின் தவறான கருத்துகளுக்கு தமிழக மக்கள் பலியாக மாட்டார்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று திமுகவினர் பேசி இருக்க மாட்டார்கள்.

 

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜனுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த தொகுதியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு எல்லோரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பதவியில் உள்ள ஒரு சிலர் தேர்தல் பணிக்கு வரவில்லை. அவ்வாறு தேர்தல் பணிக்கு வராமல் இருந்ததால் 10 வாக்குகள் அதிகமாகக் கிடைத்து இருக்கிறது. சத்தியமூர்த்தி பவனில் மக்கள் ராஜன் வயிற்று வலி அதிகமாக இருந்த காரணத்தால் அழுததாகக் கூறினார்கள். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மேலும் அவருக்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்ய பரிந்துரை கடிதம் கொடுக்கிறேன். நடிகர்களுக்கு கிளிசரின் போட்டால்தான் அழுகை வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கோ கிளிசரின் போடாமலேயே அழுகை வருகிறது" என்று  பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.