EVKS elangovan seeks chance for son in erode by-elections

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. அதில், காங்கிரஸ் மூத்ததலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. காங்கிரஸ் மேலிடம் விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன். என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரையாவது நிற்கவைக்க வேண்டும் என்று சொன்னால் எனது இளைய மகன் சஞ்சயை நிற்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியிடமும் மற்றத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். இருந்தாலும் இன்னும் சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால் மேலிடம் தான் அதனை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.