Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

erode east by election political parties filed nomination 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன், அ.ம.மு.க சார்பில் சிவபிரசாந்த், தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

 

முதல் நாளில் சுயேச்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள்  ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-வது நாள் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உட்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2ந் தேதியான 3-வது நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 10 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 3ந் தேதி 4-வது நாளாக வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வருவதால் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டிருந்தன.

 

இன்று மதியம் 1.30 மணியளவில் ஓ.பி.எஸ் அணி சார்பில் வேட்பாளர் செந்தில் முருகன் முக்கியத் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 12:10 மணி அளவில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திரண்டு வந்து மனுத்தாக்கல் செய்ய வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கூட்டணி கட்சி தலைவர்கள் நிறுத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முக்கியமான 5 நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். பின்னர் மாநகராட்சி அலுவலர்கள் சான்றிதழை சரி பார்த்தனர். அதனைத் தொடர்ந்து இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய திரண்டு வந்தார். பின்னர் வேட்பாளர் சிவபிரசாத்துடன் முக்கியத் தலைவர்கள் 5 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். சான்றிதழ் சரிபார்த்த பிறகு சிவபிரசாந்த் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

ஒரே நாளில் முக்கியக் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டிஎஸ்பி அனந்தகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாநகராட்சி அலுவலகத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதன் காரணமாக இன்று மீனாட்சி சுந்தரனார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கடும் சோதனைக்கு பிறகே ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்