erode congress struggle for Rahul Gandhi

Advertisment

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று ஈரோடு மூலப்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் மனிதச் சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். எம். பழனிசாமி, ஒன்றியசெயலாளர்கள், வட்டார தலைவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்துநாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தெற்கு மாவட்ட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.