Skip to main content

மொத்த தமிழகத்தையும் ஆளுநருக்கு எதிராக ஒருங்கிணைப்போம்! -ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
E.R.Eswaran

 

 

அனைத்து கட்சிகளோடும் இணைந்து போராட அதிமுக முன்வர வேண்டும். தமிழக அரசோடும், எதிர்க்கட்சித் தலைவரோடும் இணைந்து மொத்த தமிழகத்தையும் ஆளுநருக்கு எதிராக ஒருங்கிணைப்போம் என 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநரை சந்தித்த அமைச்சர்களிடத்தில் எதையும் சொல்லாமல் அனுப்பி வைத்தது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் வருமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. 

 

மொத்த தமிழகமும் ஒருமித்த குரல் கொடுக்கும்போது ஆளுநர் தனி ஒருவராக தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசினுடைய அனுமதிக்காக காத்திருப்பது போல தோன்றுகிறது. 

 

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை. இந்த விஷயத்தில் ஆளுநருடைய எதிர்ப்பு பாண்டிச்சேரியின் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. 

 

சுய அதிகாரத்தோடு மாநில அரசுகள் எடுக்கின்ற எந்தவொரு முடிவுக்கும் மத்திய பாஜக அரசு ஒப்புதல் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆளுநர் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்காது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஒருவகையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைதான். 

 

ஆனாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழக அரசு இருக்குமா? அல்லது மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியுமா? என்ற விவாதம் தமிழக மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. 

 

மத்திய அரசு மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்கு முன்பாக தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றிணைந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். 

 

தமிழக அரசோடு சேர்ந்து போராடுவதற்கு தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்த பின்னால் இன்னும் தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? இந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காமல்போனால் தமிழக அரசின் மெத்தனப்போக்கு தான் அதற்கு காரணமாக அமையும். 

 

ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இந்த விஷயத்தில் என்ன கடிதப் போக்குவரத்துகள் நிகழ்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு கைவிரித்ததை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போதுதான் மாநில அரசு அந்த கடிதப் போக்குவரத்தை மறைத்தது வெளியே தெரிந்தது. அந்த நிலைமை இப்போதும் நிகழ்ந்து விடக்கூடாது. 

 

தமிழக அரசோடும், எதிர்க்கட்சித் தலைவரோடும் இணைந்து இந்த விவகாரத்தில் போராடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அரசுப்பள்ளி மாணவர்கள் நம்பிக்கையான கனவோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை ஏமாற்றப்பட்டால் அந்த ஏமாற்றத்தினால் நடக்கும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு காரணமாகி விடக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.