அதிமுக பொதுக்குழுவை எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் எப்போது கூட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் வருவதற்கு வாய்ப்பு இருக்குமோ என்ற குழப்பத்தில் எடப்பாடி இருப்பதாக சொல்கின்றனர். அவரைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக உள்ளதாக கூறுகின்றனர். அந்த ஒற்றைத் தலைமையும் நான் தான் இருக்கவேண்டும் என்பதும் எடப்பாடியின் ஆசை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். அதாவது கட்சியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் தன் கையில் தான் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
ஆனால் இப்போது இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார். அதனால் பொதுக்குழு உறுப்பினர்களை உடனடியாக மாற்றவும் முடியாது. அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் ஓ.பி. எஸ்.சின் விசுவாசிகளாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை முதலில் தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதாகவும், அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டினால் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றலாம் என்று எடப்பாடி யோசிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட குழப்பங்கள் தான் அவரை முற்றுகையிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதில் இன்னும் சசிகலா தரப்பிற்கு விசுவாசியாக எடப்பாடி இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.