
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (N.D.A- என்.டி.ஏ.) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” எனப் பேசியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பொதுவாக திமுக அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி செய்து வரும். ஆனால் அமித்ஷாவோ, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறாமல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தற்போதும் கூட விளக்கம் கொடுக்காமல் மௌனம் காப்பது தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பாவுவிடம், “திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அவர்களும் என்.டி.ஏ.கூட்டணிக்கு வரலாம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அப்பாவு, “தற்போது பாஜக கூட்டணிக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியே இறுதிவரை கூட்டணியில் இருப்பாரா என்று கேளுங்கள். அவர் வேறு முடிவு எடுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுயமாக சிந்திக்கக் கூடியவர். அதனால் அவர் நல்ல முடிவை எடுப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.