வெளிநாடு போறதுக்கு முன்பு, புகாருக்கு ஆளான அமைச்சர்களையும் எடப்பாடி கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். கோட்டையில் அமைச்சர்கள் பலரையும் சந்திச்சிப் பேசினார் எடப்பாடி. அப்போது அமைச்சர் ஸ்ரீரங்கம் வளர்மதியை அழைத்தவர் அவர் மீது குவிந்திருந்த புகார்கள் குறித்து நீண்ட நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திருச்சி முசிறி பகுதியில் எடப்பாடி தரப்பு நடத்திவரும் கல்லூரி, பெட்ரோல் பங்குகள், டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றில், எந்த வகையிலும் மந்திரி ஆட்கள் மூக்கு நுழைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் முதல்வரின் அறையில் இருந்து வெளியே வந்தபோது அமைச்சர் வளர்மதி அதிருப்தியில் இருந்ததாக கூறுகின்றனர்.
அதேபோல் தன் வெளிநாட்டு டூரில் பால்வளத் துறை செயலாளரான கோபால் ஐ.ஏ.எஸ்.சை சேர்த்துக் கொண்ட எடப்பாடி, ஏன் பால் வளம் குறித்த முதலீடுகளை ஈர்க்க, ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்.ஸை சேர்த்துக்கொள்ளவில்லை என்ற சர்ச்சையும் கோட்டையில் எதிரொலிக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும் வெளிநாட்டு பயணம் குறித்த தகவலை கர்நாடக சிறையில் இருக்கும் தன்னோட மாஜி சின்னம்மாவான சசிகலாவுக்கு பணிவோடு அனுப்பிவிட்டுத்தான் போயிருக்கார் எடப்பாடி என்று கூறுகின்றனர். இதனால் சசி தரப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜகவிற்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் இது அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.