இந்த வருடம் இந்த உற்சவம் நடந்த போது, எதிர்பாராத விதமாக தங்கக் குதிரையில் இருந்து ரெங்கநாதர் கீழே சாய்ந்து விட்டார். இது ஏதோ கெட்ட சகுனத்தைக் காட்டுது என்றும், அரசுக்கோ அரசை நடத்தறவங்களுக்கோ தீய பலன்கள் ஏற்படும் என்றும் ஐதீகம் என்கின்றனர். இந்தத் தகவல் உடனே முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதைக்கேட்டு பதட்டமான அவர், மீடியாக்களில் நியூஸ் எதுவும் வராமப் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக கூறுகின்றனர். இதற்கு என்ன பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெங்கநாதர் சரிந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கோயில் தரப்பில் இருந்து மீடியாக்களுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் எடப்பாடி இந்தத் தகவலால் மிரண்டுபோய்ப் பதறியதுக்குக் காரணம், ஏற்கனவே ஜெ. விஷயத்தில் நடந்த சென்ட்டிமெண்ட்தான் என்கின்றனர். 2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று ஜெயித்து முதல்வரான ஜெ., அந்த ஆட்சிக் காலத்தில்தான்’சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியை பறிகொடுத்துவிட்டுச் சிறைக்கு சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் சம்பவம் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜெ.’வுக்கு இந்தக் கோயில் தொடர்பாக பக்தியும் பயமும் கலந்த சென்ட்டிமெண்ட் தயக்கம் உண்டு. திரும்ப அவர் ஸ்ரீரங்கத்தில் நிற்கவில்லை. இந்த சென்ட்டிமெண்டால்தான் எடப்பாடி அதிர்ச்சியானார். அவருக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் 13-ந் தேதியன்று நள்ளிரவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரிகார பூஜை ரகசியமாகவே நடத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.