Skip to main content

அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க, ஏன் பிரச்சினை பண்ணுறீங்க... அமைச்சரால் கோபமான எடப்பாடி... அதிருப்தியான நிர்வாகிகள்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

கடலூர் மாவட்டத்துக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 11-ஆம் தேதியன்று மாலை 7 மணியளவில் சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தரப்பிற்கும், அவரை எதிர்க்கின்ற நிர்வாகிகளுக்குமான கருத்து முரண்பாடுகள் கைகலப்புவரை சென்றது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் மற்ற முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இன்னும் சில மாதங்களில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் ஊரகப்பகுதிகளுக்கான தேர்தலில் தோல்வி கிடைத்ததைப்போல நிகழ்ந்து விடாமலிருப்பதற்காகவும், நிர்வாகிகளுக்குள் நிலவுகின்ற முரண்பாடுகளைக்களையவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 10, 11 தேதிகளில் தலைமைக் கழகத்தில் மாவட்டவாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
 

admk



கடலூர் மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு, மத்தி என மூன்று மாவட்ட நிர்வாகிகள் ஒரே சமயத்தில் தனித்தனி குழுவாக அமரவைக்கப்பட்டனர். கடந்த எம்.பி. தேர்தல் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல்களில் எதிர்க்கட்சி வெற்றிபெற்றதைப் போலல்லாமல் விரைவில் நடக்கக்கூடிய நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலிலும், 2021 பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. பெருவாரியாக வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கேட்டுக் கொண்டார்.

முதலில் பேசிய வடலூர் பேரூராட்சி செயலாளர் பாபு, "கடந்த 20 வருடமாக வடலூர் பேரூராட்சியை நம்மால் பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம்தான். இப்போதாவது பிடிக்கலாம் என்கிற முனைப்பில் சொந்த செலவில் கட்சிப் பணிகளை செய்துவருகிறேன். அமைச்சர் சம்பத் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இடையூறாக இல்லாமல் இருந்தால் போதும். சம்பத்தோ, "அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க, ஏன் தேவையில்லாம பிரச்சினை பண்ணுறீங்க...' என்று எதிர்க்கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார். நான் என்ன தி.மு.கவிலா இருக்கிறேன். அவர்களுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிப் போவது?''’என்று கூறி அமர்ந்தார்.

அதற்கு சம்பத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் எழுந்து, "டீ கிளாஸ் கழுவிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பாபுவை நகரச்செயலாளராக வளர்த்துவிட்டது அமைச்சர்தான். அவரைப் பற்றியே குறை சொல்கிறாயா..?'' என எகிற... அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் பழனிச்சாமி, ‘தனிப்பட்ட விஷயமெல்லாம் பேசாத, வெளியில போய்யா...' என ஒருமையில் பேசியுள்ளார்.
 

admk



அப்போது மாநில அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் எழுந்து, "கண்ட கண்ட நாயெல்லாம் எழுந்து, எதிர்த்துப் பேசுது. அமைச்சர் சம்பத், கோஷ்டி அரசியலை வளர்த்துவிடுகிறார்''’என குற்றம்சாட்ட... அதற்கு சம்பத், "அப்படியெல்லாம் கோஷ்டி அரசியல் பண்ணவில்லை''’என்று மறுத்துப் பேசியுள்ளார். அப்போது சமுட்டிக்குப்பம் சுப்பிரமணியனும் மாணவரணிச் செயலாளர் கலையரசனும், "அமைச்சரையே எதிர்த்துப் பேசுறீங்களா''…என்று எகிற... சொரத்தூர் ராஜேந்திரன் ஆவேசமாக கலையரசனை நெட்டித் தள்ள, அப்போது அவர் அருகிலிருந்த அமைச்சர் சம்பத் மீது சாய, சம்பத் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.


அதைப்பார்த்து எதிரிலமர்ந்திருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் விரைந்துவந்து இரு தரப்பையும் சமரசம் செய்தனர். அதற்குப்பிறகு பேசியவர்கள், அமைச்சரின் கோஷ்டி அரசியலால் குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி வேலை பார்க்க முடியவில்லை. கட்சியின் அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் பெயரில்லாமல் விளம்பரம் செய்கிறார்கள். சம்பத்தின் பையனை முன்னிலைப் படுத்துகிறார்கள். கோஷ்டிப் பூசலால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று ஒன்றியச் செயலாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்'' என்று கூறியுள்ளனர்.

அதன்பின்னர் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள் சார்பாக ஒருசிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். நல்லூர் ஒன்றியச் செயலாளர் பச்சமுத்து பேசும்போது, "விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் பற்றி குறை கூறிப் பேசினார். கலைச்செல்வனோ சம்பத் மீது குறை கூறினார்.


மேற்கு மாவட்டச் செயலாளர் அருண் மொழித்தேவன் பேசும்போது, “அமைச்சர் சம்பத்தால் மாவட்டத்தில் எந்த நல்ல பணியும் நடக்கவில்லை, மக்களுக்கும் எதுவும் செய்ய வில்லையென்றால் 2021-ல் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளையும் எப்படிப் பிடிக்க முடியும்..?'' என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளிவீசினார். அவரைப்போலவே எம்.எல். ஏ.க்கள் சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா, காட்டுமன்னார்குடி முருகுமாறன் ஆகியோரும், கட்சி நிர்வாகிகளும் சம்பத்தை குறைசொல்லியே பேசியுள்ளனர்.

இவற்றிற்குப் பிறகு பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், "வருகின்ற பேரூராட்சி, நகராட்சி தேர்தல்களில் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளையும், கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சிகளையும் அ.தி.மு.க. அணி கைப்பற்றுகிற அளவில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்''’என்று கூறியுள்ளார்.

முடிவாக எடப்பாடி பழனிச்சாமி, "பட்ஜெட்டுக்குப் பிறகு அனைவரும் ஒற்றுமையாக வந்து என்னை சந்திக்கவேண்டும். வேறு ஏதாவது பிரச்சனையென்றால் கடுமையான நடவடிக்கை இருக்கும்''’என்று எச்சரித்துள்ளார். கடலூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கட்சியினர் புகார் பட்டியல் வாசிக்கும் கூட்டமாக முடிந்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.