Skip to main content

கோடநாடு வழக்கு; தி.மு.க.வினருக்கும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தம்? - சந்தேகிக்கும் இ.பி.எஸ்.

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

EPS doubtful DMK's connection with criminals with Kodanadu case

 

மதுரை மீனாட்சி அம்மன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு நேற்று வந்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க மாநாடு வெற்றி பெற்றதற்கு சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர், மூலவர், சுந்தரேஸ்வரர், முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

 

அதன் பின்னர், சென்னை வருவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதுரையில் நடந்த அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை அதிமுக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். 

 

அப்போது அவரிடம்,  கோடநாடு கொலை வழக்கு குறித்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கோடநாடு கொலை வழக்கு குறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைதியாக இருந்தார். அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததை மட்டும் குறிப்பிட்டு பேசி வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு குறித்து சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியுள்ளேன். மேலும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அ.தி.மு.க ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த குற்றவாளிகளை காப்பாற்ற திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட தயாராக இருந்தார்கள். 

 

குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்ததும் தி.மு.க.வினர் தான். அதனால் தான் தி.மு.க மீது எனக்கு அதிக சந்தேகம் எழுகிறது. கோடநாடு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய ஜாமீன்தாரர்களான தி.மு.க.வினருக்கும் என்ன சம்மந்தம்? இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கொடும் குற்றங்களை செய்தவர்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்னமும் கேரளா நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களுக்கு ஏன் ஜாமீன் வழங்க திமுக தயாராக இருந்தது.

 

கொரானா பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்ததால் சிறிய காலதாமதம் ஆனது. ஆனால், அப்போது இந்த வழக்கு 90 சதவீதம் முடிவடைந்தது. அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சிக்கு பிறகு, இந்த வழக்கை ஐ.ஜி தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்மந்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். வெறும் 10 சதவீதம் மீதம் உள்ள இந்த வழக்கை முடிப்பதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது. எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாத காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அடிக்கடி வெளியிடும் குற்றச்சாட்டுகளை கண்டும் நாங்கள் எப்போதும் பதறவில்லை.  குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்களை விசாரித்தால் தான் உண்மை என்னவென்று வெளிவரும். அதனால், கோடநாடு வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.