Skip to main content

தினகரன் கட்சியின் முக்கிய புள்ளிக்கு தூது அனுப்பிய எடப்பாடி... கடும் கோபத்தில் இருக்கும் எடப்பாடி!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

அ.ம.மு.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டிருக்கும் நிலையில்... "அக்கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் மட்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. "பல்வேறு கட்சிகளுக்கு பழனியப்பன் தூது அனுப்பிக்கொண்டிருப்பதால்தான், அவரை எடப்பாடி வெறுக்கிறார்' என்கிறார்கள். அதேநேரத்தில் எதிர் தரப்பினரோ, "அனுப்பிய தூதுவர்களை எல்லாம் பழனியப்பன் துரத்திவிட்டதால்தான் அவர் மீது எடப்பாடி வெறுப்பை காட்டுகிறார்' என்கிறார்கள்.

 

admk



அ.ம.மு.க.வுக்கு சென்றுவிட்ட பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன் ஆகிய இருவரையும் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக எடப்பாடி முயற்சி எடுத்துள்ளார். பாண்டிச்சேரியில் 18 எம்.எல்.ஏக்கள் இருந்தபோது பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி கிழங்கு மில் உரிமையாளர் அன்பழகன் மூலமாக எடப்பாடி தூது அனுப்பியிருக்கிறார். பல மில்களின் ஓனரான இந்த அன்பழகன் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகச் சொல்கிறார்கள்.
 

admk



பழனியப்பன், அண்ணா தொழிற்சங்க சிறப்புத் தலைவராக இருந்தபோது வரலட்சுமி கிழங்கு மில்லில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதிய ஊதிய உயர்வு கொடுக்காமல் இருந்திருக்கிறார் அன்பழகன். இந்த விவகாரம் பழனியப்பனிடம் சென்றபோது, அவர் இது தொடர்பாக அன்பழகனை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றாகிவிட்டது. இப்படி முன்விரோதம் இருந்த நிலையில்தான், எடப்பாடி சொன்னதற்காக தூது சென்றிருக்கிறார் அன்பழகன். பகைமை மறந்து பாண்டியில் கைகுலுக்கிய அன்பழகன், ""நான் இப்போது கட்சி விசயமாக பேச வந்திருக்கிறேன். நீங்களும் முருகனும் அ.தி.மு.க.வுக்கு வந்தால்போதும். நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்''’என்று சொல்ல, அந்த டீலிங்கை மறுத்துள்ளார் பழனியப்பன். அடுத்தகட்டமாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ.வான வெங்கடாச்சலம் மூலமாக தூது அனுப்பியுள்ளார் எடப்பாடி. அப்போதும் பழனியப்பன் செவி சாய்க்காத நிலையில்தான், பழனியப்பனை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் எடப்பாடி.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மோகனூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு காண்ட்ராக்டருமான சுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனை நடந்த சில நாட்களில் சுப்பிரமணியன் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, விசாரணையில் பழனியப்பன் பெயரையும் இணைத்து மிரட்டியுள்ளார். அதிலும் பழனியப்பன் பணிந்து வராததால்தான், அவர் மீதான ஆத்திரத்தில், பல்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

இதுதொடர்பாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பழனியப்பனிடம் நாம் பேசிய போது,

"நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர்தான் எனக்கு தூது அனுப்பினார். அதற்கான விசயத்தை நான் வெளிப்படையாக சொல்கிறேன். அன்பழகன் மட்டுமல்ல, இன்னும் யார், யார் மூலமாக எனக்கு தூது அனுப்பினார் என்றும் என்னால் சொல்ல முடியும். அதேபோல அவரால் சொல்ல முடியுமா? நான் அவருக்குத் தேவை. அதனால், இழுத்துப் பார்த்தார் முடியவில்லை, அதனால் ஏதேதோ அவிழ்த்துவிடுகிறார்''’என்கிறார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.