
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டம் இன்றும் (29.05.2025), நாளையும் (30.05.2025) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஒரு பூத்துக்குகு 9 பேரை நியமிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதில் மூன்று 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சார்ந்த நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.
பூத் கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கி மார்ச் மாசத்திற்குள் முடிக்க வேண்டும் எனத் தலைமை கழகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில் முதற்கட்டமாக இன்று காலை புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனை நடைபெற உள்ளது. மதியம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆலோசனை நடைபெற உள்ளது.