Skip to main content

“தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

EPS Addressed press after elected as ADMK General Secretary

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும், மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு, மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், 18ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த இ.பி.எஸ். 11.05 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல்கள் எழுந்து வந்த நிலையில், இ.பி.எஸ். சார்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள், அப்படி யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் இ.பி.எஸ். ஒருமனதாக அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்!

 

ஆனால், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்ததும், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அந்த வழக்குடன் சேர்த்து பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது. 

 

EPS Addressed press after elected as ADMK General Secretary

 

அதனைவிடத் துரிதமாகச் செயல்பட்ட இ.பி.எஸ். தீர்ப்பு வந்ததும் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இ.பி.எஸ்.-ஐ பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். 

 

இதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இ.பி.எஸ். “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களையும் வணங்கி பல்வேறு சோதனைகளுக்கு இடையிலேயே இரு தலைவர்களின் கனவையும் நினைவாக்கும் வகையில், அதிமுக தொண்டர்களால் பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட்டு, தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் என்னை கழகப் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளனர். அதிமுகவின் தொண்டர்களால் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.