Skip to main content

நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்... ராமதாஸ்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

ஊரக, ஏழை மாணவர்களின்  உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.
 

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளை பாதிக்கும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளை சிதைக்கும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.


 

ENTRANCE EXAMINATION



மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி இதை கடுமையாக எதிர்த்தது. தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதேபோல் மேலும் பல கல்வியாளர்களும் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
 

நுழைவுத்தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத்  தேர்வு என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்கு தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும்.


 

நுழைவுத்தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகள் தான் உதாரணம் ஆகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் தகுதி குறைந்தவர்களும், பணத்தை மட்டுமே வைத்திருப்பவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவது அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டு விடவில்லை. மாறாக, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப் பட்டு, நீர் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்டது தான் மிச்சமாகும். இப்போதும் அதேபோன்று புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


 

பொதுவாக வாய்ப்புகள் முழுமையாக உருவாக்கப்பட்ட பிறகு தான் வடிகட்டல்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. நாட்டில் உயர்கல்வி கற்போரின் அளவு இன்னும் 26.3 விழுக்காட்டைத் தண்டவில்லை. இதற்கான காரணம்  போதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன், உயர்கல்வி கற்க மாணவர்கள் முன்வராததும் ஆகும். இதை உணர்ந்து தான் உயர்கல்வி கற்போரின் அளவை 50% என்ற அளவுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, கூடுதல் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுகளை திணிப்பது ஊரக மாணவர்களை கல்லூரிகள் பக்கமே வராமல் தடுத்து விடும். மொத்தத்தில் இது தமிழகத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி முறையை விட மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

 

முதலில் அனைவருக்கும் கல்வி இயக்கம், பின்னர் அனைவருக்கும்  இடைநிலைக் கல்வி இயக்கம்  என்பன போன்று புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்திய மத்திய அரசு, கல்லூரிக் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஊரக, ஏழை மாணவர்களின்  உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.