Skip to main content

மின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்! முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கண்டன போராட்டம்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
K. Balabharathi

 

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தாக்குதல் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தாக்குதல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள  வீடுகள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழக மின் வாரியம் மின் கணக்கீடு செய்யாமல் இருந்தது.

ஆனால் தற்பொழுது தமிழகம் முழுவதும் மின் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கணக்கீடு என்ற பெயரில் மின்வாரியம் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்தும் மின்வாரியத்தின் மின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மார்ச், ஏப்ரல் மாத மின் கணக்கீட்டை தனியாகவும், மே, ஜூன் மாத கணக்கீட்டை தனியாகவும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் பழனி புறவழிச்சாலையை அடுத்துள்ள மீனாட்சி நாயக்கன்பட்டி செயல்பட்டுவரும் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக பழனி புறவழிச் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தமிழக அரசுக்கு எதிராகவும் மின் வாரியத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலபாரதி, தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய கொள்ளை நடத்தி வருகிறது. பலதரப்பட்ட மக்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுத்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த கரோனா காலத்தில் நான்கு மாதத்துக்கு மொத்தமாக மின் கணக்கீட்டை எடுத்து அதை இரண்டாக பிரித்து புதிய மின் கட்டணமாக மக்கள் தலையில் சுமத்தி வருகிறார்கள். இதனால் வீடுகளில் மின் கட்டணம் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வருகிறது. 

கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு 100 யூனிட் இலவசமாக பயன்படுத்தி வந்த மக்கள்கூட இன்றைக்கு ஆயிரக்கணக்கில் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடனடியாக  மின்சார வாரியம் மின் கட்டணத்தை பரிசீலனை செய்ய வேண்டும். அதுவும் இந்த கரோனா காலத்தில் மின்சார கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த கரோனா காலத்தில் அரசு ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பு மக்களுக்கு நிவாரணமாக கொடுத்துவிட்டு, இப்போது மின்கட்டணம் மூலம் ரூபாய் 3 ஆயிரம் வரை ஏழை, எளிய மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான மின் கட்டணத்தை தமிழக அரசுக்கு கொடுக்க முன் வர வேண்டும்.

அதுபோல் 2020 மின் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் மக்களிடம் மின் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார். 

அதன்பின் மாவட்ட மின்வாரிய அதிகாரியான வினோத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் கோஷ் மற்றும் தாதன் கோட்டை ஆறுமுகம் உள்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.