தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமியை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29/03/2021) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது. "தன்னலம் பாராமல் மக்களுக்காக உழைக்கக் கூடியவர் சைதை துரைசாமி. சென்னை மாநகராட்சியில் அனைத்துத் தொகுதிகளும் சிறப்பாக அமைய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் சைதை துரைசாமி. சென்னை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். கண்ணை இமை காப்பது போல், சென்னை மாநகராட்சியைக் காத்தவர் சைதை துரைசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மனதில் இடம் பெற்றவர். வேறு ஒருவரின் நிலத்தை மா.சுப்பிரமணியன், அவரது மனைவி பெயருக்கு மாற்றியதால்,அவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. நிலம் அபகரிப்பு மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காகவே நில அபகரிப்பு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் லியோனி பெண்களை இழிவாகப் பேசி வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே அராஜகம் செய்யும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலை, பெண்களின் நிலை என்னவாகும்? நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதே தெரியாதவர்தான் ஸ்டாலின்"இவ்வாறு முதல்வர் கூறினார்.