Edappadi Palaniswami will meet the Governor tomorrow

Advertisment

தஞ்சை மாவட்டம், கீழவாசல் பகுதியில் அரசு மதுபானக் கடையான டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் பார் வசதியுடன் உள்ளது. இந்த மதுபான பாரில் பிளாக்கில் மது வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய குப்புசாமி, விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்ட விரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மதுவிற்பனையை நடத்தி வருகிறது‌.அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

Advertisment

நான் பலமுறை இத்துறையில் நடந்து வரும் முறைகேடுகளை எடுத்துரைத்தும் வழக்கம்போல் இந்த அரசு மக்களின் உயிர் காக்க அக்கறையின்றி மெத்தனம் காட்டி வருகிறது. ஆகவே தஞ்சாவூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நிகழ்ந்தபோலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டியும் ஆளுநரிடம் நாளை மனு அளிக்க உள்ளோம்.