Skip to main content

ராகுலை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டி; இந்தியா கூட்டணி எப்படி வெற்றி பெறும்? - இ.பி.எஸ்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Edappadi Palaniswami criticized of India alliance and Stalin

திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், திருச்சி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(7.4.2024) பிரச்சாரம் செய்தார்.  அப்போது, அவர் பேசியதாவது:  பாராளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாத போது, எப்படி ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த கூட்டணியில், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்லவே இல்லை. டெல்லியில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஆம்.ஆத்மி.கட்சி, பஞ்சாபில் காங்கிரஸுடன் போட்டி களத்தில் உள்ளது. கேரள மாநில லோக்சபா தொகுதியில், ராகுலை எதிர்த்து, இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரே வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். இந்தக் கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து, வெற்றி பெற்று, ஆட்சிக்கு வர முடியும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எங்கு போய் சேர்ந்தாலும், அங்கு ஏழரை பிடித்து விடும்; அவ்வளவு ராசியானவர். இவர், சேராமல் இருந்திருந்தால், இந்தியா கூட்டணி பலமாக இருந்திருக்கும். இவர் சேர்ந்ததன் விளைவாக, காரில் டயர்கள் கழன்று செல்வது போல், ஒவ்வொரு கட்சியாக கழன்று போய் விட்டதால், பெயரளவுக்கு இந்தியா கூட்டணி இருக்கிறது. தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட ஸ்டாலின், இந்தியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார். அந்தப் போர்வை இல்லை என்றால், லோக்சபா தேர்தலில் ஸ்டாலின், டெபாசிட் கூட வாங்க மாட்டார். இந்தியா கூட்டணியை முன்னிறுத்தி மக்களிடம் ஓட்டுக்களை பெறுவதற்கு, தந்திரம் செய்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய அனுபவத்தின் அடிப்படையில, கள்ளக் கூட்டணி என்றும் கள்ளத்தொடர்பு என்றும் கூறி வருகிறார். மனதில் உள்ளது தான் வெளியில் வருகிறது. அவர்களுக்குள் வேண்டுமானால், அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். பழக்க தோஷம் காரணமாக என்னை வைத்து, கள்ளத்தொடர்பு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.  ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றால் பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்திருப்போம். எங்களுக்கு ஓட்டுப் போடும் மக்கள் தான் முக்கியம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,யின் மூலமாக, மக்கள் குரலை பார்லிமெண்ட்டில் ஒலிப்பது தான் எங்கள் லட்சியம். குடும்ப உறுப்பினர்களை ஆட்சி, அதிகாரத்திற்கு கொண்டு வந்து கொள்ளையடிப்பது, எங்கள் லட்சியம் அல்ல.

ஜனநாயக கட்சியான அ.தி.மு.க.,வில் மக்களுக்கு உழைக்க வேண்டும், என்ற பாடத்தை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கற்றுக் கொடுத்துள்ளனர். தி.மு.க.,வை போல் கார்ப்பரேட் கம்பெனி அல்ல. சில எட்டப்பர்கள், தி.மு.கவுடன் சேர்ந்து சின்னத்தை முடக்க வேண்டும், என்று முயற்சி செய்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைவர்கள், தெய்வங்களாக இருப்பதால், தீய சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜ., கூட்டணியில் இருந்த போதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் மொத்தம் 14 ஆண்டுகள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க., தமிழக மக்களுக்கு என்ன செய்தது? என்று மக்கள் கேள்வி கேட்கக் துவங்கி விட்டனர். மக்களுக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வராமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொள்ளையடிக்க வேண்டும், என்று திட்டமிடும் கட்சி தி.மு.க.

தி.மு.க., முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில், மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சியை பார்க்க முடிகிறது. மூன்று ஆண்டு கால ஆட்சியில், மக்கள் மீது மூன்றரை லட்சம் கோடி கடன் சுமையை சுமத்தி இருக்கிறீர்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பல லட்சம் கோடிகளை கொள்ளையடிக்கலாம், என்பது ஸ்டாலின் கனவு. அது பகல் கனவு. அ.தி.மு.க., ஆட்சியில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 6 சட்டக் கல்லுாரிகள் அமைத்து சாதனை மேல் சாதனை படைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. பணப்புழக்கம் இல்லாமல், மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏழை எளியோர் மற்றும் மாணவ, மாணவியருக்கான திட்டங்களை நிறுத்தி, தமிழகத்தை சீரழித்து விட்டது தி.மு.க. அரசு. உங்களுக்கு துரோகம் நினைத்தவர்களுக்கு, இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது போல், அ.தி.மு.க., ஆட்சியில் என்னென்ன சீரழிவுகள் நிகழ்ந்தன, என்று சொன்னால் அதற்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் ஆதாரத்துடன் பேச வேண்டும், என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க., மீது வீண் பழி சுமத்தி பின்னுக்கு தள்ளி விடலாம் என்று நினைக்காதீர்கள். எதையும் சிந்தித்து செயல்படக் கூடிய அறிவுப்பூர்வமான தமிழக மக்கள், எதையும் எடை போட்டு தீர்ப்பளிக்கக் கூடியவர்கள். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று மக்கள் தெளிவு பெற்று விட்டனர். தமிழர் உரிமை மீட்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். அதிமுக வேட்பாளர் கருப்பையாவை அமோக வெற்றி பெறச் செய்வோம்.  இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர்கள் ஜோதி வாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினீயர் இப்ராகிம் ஷா, சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, ஜெயம் ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர், எம்.ஜி .ஆர் மன்றம் கலிலுல் ரகுமான், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, சுரேஷ்குப்தா, புத்தூர் ராஜேந்திரன், ரோஜர், கலைவாணன், நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, வசந்தகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.