Skip to main content

“பதவியை தேடி அலைகிறார்..” தி.மு.க. எம்.பி. மீது இ.பி.எஸ். கடும் தாக்கு

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Edappadi palanisamy speech at walaja


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். 

 

இன்று (20.01.2021) காஞ்சிபுர மாவட்டம், வாலாஜாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பேசிய அவர், “தயாநிதிமாறன் தேர்தல் சமயத்தில்தான் வெளியே வருவார். அதன்பிறகு அவரைப் பார்க்க முடியுமா. ஜெகத்ரட்சகன் ஒன்று, இரண்டு அல்ல ரூ.25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். இது தமிழ்நாட்டில் போடப்படும் பட்ஜட்டில் எட்டில் ஒரு பாகம். அவ்வளவு சொத்தையும் பாதுகாப்பதற்காகவும், சொத்துக்குமேல் சொத்துக்களைக் குவிப்பதற்காகவும் அவர் பதவியைத் தேடி அலைகிறார். 

 

அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டன் முதல்வராக முடியும். தி.மு.க.வில் கலைஞர் முதல்வராக இருந்தார். அதன்பிறகு ஸ்டாலின் முதல்வராக வர துடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரால் வர முடியாது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின். வாழை மரத்தில் இடைக் கன்று முளையாவது போல் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவராக முளைக்கிறார்கள். இன்று சாதரனமாக மக்களோடு மக்களாக வாழ்ந்துவருபவர், பதவிக்கு வந்தால்தான் மக்களின் கஷ்டங்கள் தெரியும். 1989-ல் ஸ்டாலின் அவரது அப்பாவின் செல்வாக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். நான் அதே ஆண்டு என் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்றால் எப்படி உழைக்க வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும். 

 

கலைஞர் இருந்த காலத்திலே தி.மு.க.வில் வாரிசு அரசியல்தான். அவர்களைத் தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது; விடவும் மாட்டார்கள். ஆனால் அதிமுகவில் யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, யார் மக்களுக்காக பாடுபடுகிறார்களோ, யார் தலைமைக்கு விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்கூட முதல்வராக முடியும். அதற்கு நானே உதாரணம். தற்போது ஸ்டாலின், 27ஆம் தேதிக்கு மேல் எனது ஆட்சி இருக்காது எனப் பேசுகிறார். ஆனால் 27க்கு பிறகும் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்று பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.