Skip to main content

“சசிகலா அ.தி.மு.க.வில் இணைய 100% வாய்ப்பே இல்லை..” - முதல்வர் பழனிசாமி அதிரடி

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Edappadi palanisamy press meet after met PM Modi
                                                             கோப்புப் படம் 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக நேற்று (18/01/2021) காலை 11.55 மணிக்கு டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (19 ஜன.) காலை பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.  

 

மோடியை சந்தித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன். அதேபோல் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் அதனை ஏற்றுகொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கோதாவரி காவிரி இணைப்புத் திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். 

 

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் அதிகம் பயன் பெறும் காவிரி குண்டாறு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை தூய்மை செய்யும் திட்டம் ஆகிய இரண்டிற்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஜனவரி மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு 99.60 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டின் பல முக்கிய திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரம் பெறுவதற்குத் தகுந்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு, சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாடங்களை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதனை விரைந்து செயல்படுத்துமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளேன்.    

 

எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 12 மீனவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மீன்வள உள்கட்டமைப்பு நிதியில் மீன்பிடி துறைமுகங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன். மேலும் துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன். இவற்றை எல்லாம் பிரதமர் மோடி பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்தும் அரசியல் ரீதியாகவும் ஏதும் ஆலோசித்தார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “நான் வந்தது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வைத்த நீண்டகால கோரிக்கைகளுக்காகவும். அரசியல் எதுவும் பேசவும் இல்லை, அது பேச உகந்த நேரம் இதுவுமில்லை” எனத் தெரிவித்தார். 

 

சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “100 சதவீதம் வாய்ப்பே இல்லை, அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவருடன் இருந்த பல பேர், அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். சிலர் மட்டும்தான் அவருடன் இருக்கிறார்கள். ஜெயலலிதாவே அவரை பல ஆண்டுகளாக நீக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகுதான் அவருக்குப் பதவியே வழங்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது” என்று தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.