Skip to main content

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

Amit Shah said DMK victory can be prevented only if TTV Dhinakaran joins AIADMK

 

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக சென்னை வந்தவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அவரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அமித்ஷாவை சந்தித்தனர்.

 

இந்தச் சந்திப்பில், தேர்தல் அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து அவர்களிடம் விவாதித்தார் அமித்ஷா. குறிப்பாக, அதிமுக - பாஜக கூட்டணிக்கான வெற்றி குறித்து அவர்களிடம் அமித்ஷா கேட்டபோது, “140 முதல் 156 இடங்களில் நம் கூட்டணி ஜெயிக்கும்” என தன்னிடமிருந்த ஒரு சர்வே ரிப்போர்ட்டைக் காட்டி நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனை ஏற்க மறுக்கும் தொனியில் தலையை இடது வலதாக அசைத்த அமித்ஷா, மத்திய உளவுத்துறை மட்டுமல்லாமல், தனியார் ஏஜென்சிகள் மூலம் எடுக்கப்பட்ட சர்வேக்களில், ‘அதிமுக கூட்டணிக்கு 80-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்’ என சொல்லப்பட்டிருக்கும் ரிப்போர்ட்டுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

 

ஏதோ ஒரு திட்டத்துடன்தான் அதிமுகவைக் குறைத்து மதிப்பிடுவதாக நினைத்து மௌனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து, அதிமுகவை விட்டு பிரிந்து சென்றுள்ள தினகரனை கட்சியில் இணைத்துக்கொண்டால் திமுகவின் வெற்றியைத் தடுக்கலாமே? என அமித்ஷா சொன்ன போதுதான், எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை புரிந்திருக்கிறது. அப்போது, “டி.டி.வி தினகரன் கட்சிக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அவரிடமிருந்த முக்கியஸ்தர்களும் தற்போது அவரிடம் இல்லை. அவருடைய கட்சியில் இருந்த தொண்டர்கள் அதிமுகவிற்குத் திரும்பிவிட்டனர். அவரிடம் இப்போது இருப்பது ஒரு சிறு குழுதான்.

 

அவரால் பிரியும் வாக்குகள் சொற்ப அளவில்தான் இருக்கும். அது அதிமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது. அ.ம.மு.க. இணைப்பை வலியுறுத்தாதீர்கள். என்னை நம்புங்கள். பாஜகவின் வெற்றிக்கும் நான் உத்தரவாதம் தருகிறேன்” என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து, பாஜக போட்டியிட விரும்பும் எண்ணிக்கையையும் தொகுதிகளையும் சொல்லி, ‘அதனை உறுதிசெய்யுங்கள், அதுபற்றி தமிழக தலைவர்கள் பேசுவார்கள்’ என அழுத்தமாக தெரிவித்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பினார் அமித்ஷா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.