Skip to main content

எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியே பேசிய ஈ.பி.எஸ். - அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். டீம்...

Published on 11/06/2019 | Edited on 11/06/2019


 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏற்பட்டதற்கு கட்சியில் உள்ள இரட்டை தலைமை தான் காரணம் என்றும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையின் கீழ் அதிமுக கட்சி செயல்பட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இரண்டு நாட்களுக்கு முன் பகிரங்கமாக பேட்டி அளித்தார். இவரது கருத்துக்கு குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்தார். 


  ops - eps



இந்த சூழ்நிலையில் அதிமுக நிர்வாகத்திற்கு எதிராக பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, உள்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாளை (12ம் தேதி) அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி முன்னணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
 

ஒரு தலைமைதான் வேண்டும் என்று திடீரென குரல் எழுவதற்கு என்ன காரணம் என்று அதிமுகவில் விசாரித்தபோது, ராஜன் செல்லப்பா எடப்பாடி ஆதரவாளர். ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு அளித்து பேசிய குன்னம் ராமச்சந்திரன், வைத்திலிங்கத்தின் ஆதரவாளர். ஆகையால் ஏற்கனவே எடப்பாடியின் ஆலோசனையின் பேரில்தான் ராஜன் செல்லப்பா இப்படி பேசியிருக்கிறார். 
 

ராஜன் செல்லப்பா பேசியதையடுத்து சென்னையில் 12ஆம் தேதி ஆலோசனை கூட்டம் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளனர். அதற்குள் எடப்பாடி பழனிசாமி, அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தேர்தல் தோல்வி பற்றி கூட்டத்தில் எதுவும் பேச வேண்டாம். அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதா முதல்வர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவி என இரண்டையும் சேர்த்து வகித்து வந்தார். அதனால் கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. அதே போன்று முதல்வர் தலைமையில் கட்சி செயல்பட்டால்தான், வரும் நாட்களில் அதிமுகவை சிறப்பாக வளர்க்க முடியும் என்று வலியுறுத்தி பேச வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளாராம். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி, கட்சி தலைமை பதவியையும் தனக்கு கிடைக்கும் வகையில் செய்துவிடலாம் என்று எடப்பாடி செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக பேசவும் தயாராகி வருகிறார்களாம். 


 

2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு இருந்தது. பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி ஏற்படுத்தப்பட்டது அதிமுக பைலாவுக்கு எதிரானது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ஜீலையில் வர உள்ளதாலும், முன்கூட்டியே இதுபோன்ற நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறாராம். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.