Skip to main content

"எது எதுக்கோ ஒப்பிட்டு பேசும் நீங்க இதை ஏன் மறந்துட்டீங்க" - முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

edappadi palanisamy

 

தமிழக அரசின் சொத்துவரியை உயர்த்தும் முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது.

 

இந்நிலையில் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சொத்துவரியை உயர்த்தியுள்ள முதல்வர் ஸ்டாலின் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருடைய வீட்டு மக்களை பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். நாட்டில் என்ன நிலவரம் என்பதுகூட தெரியாமல் இருக்கிற ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர் தான். கொரோனா தொற்றால் இரண்டாண்டு காலம் வேலை இல்லாமல் வாழ்வாதாரமே இழந்து இருக்கிற நிலையில் மக்கள் விரோத அரசு மக்கள் மீது மிகப்பெரிய வீட்டு வரிச்சுமையை சுமத்தியிருக்கிறது. அம்மாவின் அரசாங்கத்தில் வரியே உயர்த்தப்படாமல் இருந்தது. மத்திய அரசு வரியை உயர்த்தும்படி கூறவில்லை. மத்திய அரசு மீது பழிபோட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு.  

 

மும்பை, கொல்கத்தாவில் வரி உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், டெல்லியில் வரி அதிகரிக்கவில்லை என்பதை மறந்துவிட்டார்கள். ஒப்பிட்டு பேசுவதற்கு இது நேரமா? இவர்களுக்கு எது சாதகமாக இருக்குமோ அதோடு மட்டும் ஒப்பிட்டு கூறுகிறார்கள். நிர்வாகத்திறன் இல்லாத கையாலாகாத ஒரு அரசாங்கம் ஸ்டாலின் தலைமையில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இந்தியாவிலியே புத்தக வடிவில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட கட்சி திமுகதான். செய்யவா போகிறோம், மக்களை ஏமாற்றத்தானே போகிறோம் என்று புத்தகமாக அடித்து வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் 487ஆவது வாக்குறுதியில் கொரானாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும்வரை சொத்துவரி அதிகரிக்கப்படாது என்று வாக்குறுதி தந்தார் முதல்வர் ஸ்டாலின். எதுஎதற்கோ தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு பேசும் நீங்கள் இதை ஏன் மறந்துவிட்டீர்கள்" எனக் கேள்வியெழுப்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.