Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  இராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 

அதன் விவரம் வருமாறு:
 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும் முயற்சிகள், அத்தகைய முயற்சிகளில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த கடிதத்தை  எழுதுகிறேன்.

 

anbumani


 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரப்பளவில் விவசாயம் நடைபெறுவது காவிரி பாசன மாவட்டங்களில் தான். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தையும் சேர்த்துக் கொண்டால் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியம் என்ற நிலையிலிருந்து படிப்படியாக எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றப்பட்டு வருகிறது.
 

இதற்கான முதல் விதை 30 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்டது. 1989&ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு 28.08.1989 அன்று தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு  அனுமதி அளித்தது. அப்போதிலிருந்து தான் காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுவது தொடங்கியது. இப்போது தமிழகம் முழுவதும் 700&க்கும் கூடுதலான எண்ணெய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 219 எண்ணெய் கிணறுகளை ஓஎன்ஜிசி நடத்தி வருகிறது. மேலும் 104 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

 

அதைத் தொடர்ந்து 2010&ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுக்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் வாயுத் திட்டங்களும், அவற்றின் தொடர்ச்சியாக பாறை எரிவாயு திட்டங்களும் செயல்படுத்தப்படவிருந்தன. ஆனாலும், இத்தகைய திட்டங்களை அனுமதிக்க முடியாது என்பதில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு உறுதியாக இருந்ததாலும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் மீத்தேன் திட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே, தமிழகத்தின் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு அளித்திருந்த உரிமமும் முடிவுக்கு வந்ததால் மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தமிழகம் தப்பியது.
 

எனினும், 2017&ஆம் ஆண்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்த பின்னர், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியது. எனினும் அந்த கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
 

ஆனாலும், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும்.
 

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களாலும் டெல்டாவுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் சாயப்பூங்காவும் காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளத்திற்கும், நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடிக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


 

ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் காவிரி பாசனப் பகுதிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படாது மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை.  ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பாசனப் பகுதிகளில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை  உணர்த்த நைஜீரியாவில் ஏற்பட்ட பேரழிவை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் காவிரிப் பாசன மாவட்டங்களைப் போலவே நைஜீரியாவின் நைஜர் நதிப் பாசனப் பகுதிகளும் வளம் கொழிக்கக்கூடியவையாகும். அப்பகுதியில் வேளாண்மை வெற்றிகரமாக நடைபெற்று வந்ததால் அங்கு ஏழைகளே இல்லை என்ற நிலை இருந்தது. ஏழைகள் இல்லாததால், திருடர்கள் பயமோ, கொள்ளையர்கள் பயமோ இல்லை. அங்குள்ள மக்கள் வெளியில் செல்லும்போது தங்களின் வீடுகளைப் பூட்டாமல் செல்லும் அளவுக்கு அங்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவி வந்தது.
 

ஆனால், நைஜர் டெல்டாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியது. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதால், நைஜர் பாசன மாவட்டங்களில் பணம் கொட்டத் தொடங்கியது. அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக, எண்ணெய் வளத்தை அனுபவிக்கவும், புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளில் சேரவும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அதே நேரத்தில், எண்ணெய்க் கிணறுகளால் பாசனம் பாதிக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்பட்டனர். அடக்குமுறையை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

 

eps


 

மற்றொருபுறம் எண்ணெய் வளத்தின் பயன்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கவில்லை. அவர்களுக்கு சொந்தமான வளங்களும் சுரண்டப்பட்டன. அதனால், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறினர். ஒரு கட்டத்தில் எதுவுமே கிடைக்காத ஏழைகள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளச் சட்டவிரோத வழிகளைக் கடைப்பிடித்தனர். இதனால், துப்பாக்கி கலாச்சாரமும், மோதலும் அதிகரித்தது. நைஜீரியாவில் இப்போது அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களிலும் அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பா.ம.க. போராடுகிறது.
 

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி,  அத்திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் இருந்து பெற்றேன். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன்.
 

தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகளிலேயே பா.ம.க.தான், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியது. 2016&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் இதற்கான வாக்குறுதியை அளித்திருந்தது. அதுமட்டுமின்றி, 2019&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் முதன்மை கோரிக்கை என்பதை தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
 

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தங்களிடம் வேறு சில தருணங்களிலும் வலியுறுத்தியுள்ளேன். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தங்கள் ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
 

எனவே, இராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து அந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.