Skip to main content

''எங்களுக்கும், ஓபிஎஸ்க்கும் மட்டுமல்ல டெல்லிக்கும் துரோகம் செய்யத் தொடங்கி விட்டார் இபிஎஸ்...'' - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

"Edappadi has started betraying not only us and OPS but also Delhi" - DTV Dinakaran interview

 

அண்மையில் பெய்த  வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாகப் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

 

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ''மயிலாடுதுறை மாவட்டத்திலும் பன்னீர் செல்வத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார். இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமை. எனவேதான் தலைமை இல்லாத கட்சியாக அதிமுக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

 

எப்படி அவரை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்த எங்களுக்குத் துரோகம் செய்தாரோ, அதேபோல் ஆட்சி போய்விடும் என்ற நிலைமையில் உதவி செய்த ஓபிஎஸ்-க்கு செய்தாரோ, அதுபோல பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் அது வேறு யாருக்கும் கிடையாது என்று சொல்லி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் பொதுக்குழுவைக் கூட்டி உருவாக்கிவிட்டு இன்று ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்யும் வகையில் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்.

 

அவர் இடைக்கால பொதுச் செயலாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். பொதுக்குழு என்பது 2000 பேர் கலந்து கொள்வது. அவர்களை தன் வசப்படுத்துவது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. எனவே இந்த 2000 பேர் மட்டும் கட்சியல்ல; தொண்டர்கள் எத்தனையோ லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நிர்வாகிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை எல்லாம் கூட வசப்படுத்தி விடலாம் ஆனால் தொண்டர்களையும், மக்களையும் வசப்படுத்த முடியாது.

 

துரோகத்தைத் தொடர்ந்து செய்கின்ற பழனிசாமி நான்காண்டுகள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று நடிக்கிறாரே நான்காண்டுகள் இவர்களது ஆட்சி தொடர்வதற்கும், ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுப்பதற்கும் காரணமாக இருந்த டெல்லிக்கும் அவர் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டார் என்பதுதான் உண்மை. அதனால்தான் டெல்லி அதைப் புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நினைக்கிறோம். எடப்பாடி பழனிசாமி என்ற துரோகத்தின் உருவம் வீழ்ந்தால்தான் அதிமுக கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.