Skip to main content

மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்...! எடப்பாடி பரப்புரை

Published on 23/03/2019 | Edited on 23/03/2019


மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது கூறினார்.

 

edappadi and suthish


கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019), கருமந்துறையில் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக அவர் அங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டார். 


கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் மற்றும் சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் சித்ரா, வெங்கடாஜலம், தேமுதிக நிர்வாகி இளங்கோவன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோரும் அந்த கோயிலில் வழிபட்டனர். இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதி மக்களிடம் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். 


பின்னர் திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசியதாவது: 


இந்தியா பாதுகாப்பாக இருக்க, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். கடந்த 16 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக, மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செய்ய தவறிவிட்டது. பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சித்து வரும் திமுக, கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அக்கட்சியுடன்தான் கூட்டணி வைத்து இருந்தது. அப்போது மதவாத கட்சியாக தெரியவில்லையா? இப்போது அதிமுக, அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மதவாத கட்சி என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது திமுக.


மத்தியில் ஒரு ஆட்சியும் மாநிலத்தில் வேறு ஒரு ஆட்சியும் நடந்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாது. நூறு கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருள்களும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற முயற்சி செய்த கட்சிதான் திமுக. மக்களுக்கு பயன்தரும் திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை முறியடிக்க நினைக்கும் கட்சியாக திமுக இருக்கிறது. 


வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வழக்கு தொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவக்கூடிய செயல் திட்டங்களை திமுக தொடர்ந்து முறியடிக்கிறது. கட்சி பாகுபாடின்றி 2 கோடி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கம்தான் அதிமுக அரசுக்கு உள்ளது. 


நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே சட்டசபையில் 110-வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவாசல் அருகே, 900 ஏக்கரில் 396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இதில் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.  


அதிமுக ஆட்சி செய்வதைப்போல திமுக ஒருபோதும் செய்யாது. பொய் வாக்குறுதிகளை கூறிவிட்டு செயல்படுத்த முடியாத ஆட்சியாக திமுக இருக்கும். கடந்த மாதம் இந்தியாவையே உலுக்கிய 40 ராணுவ வீரர்கள் படுகொலை சம்பவம், அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. விமான போரின்போது எதிரிகளின் பிடியில் இந்திய விமானி பிடிபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக பேசி, பெருமையைத் தேடித்தந்தார் மோடி. விமானப்படை மூலம் குண்டுகள் வீசி எதிரிகளை தாக்கிய பெருமையும் பிரதமருக்கு உண்டு. 130 கோடி மக்களின் பாதுகாப்பை காக்க மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும். 


தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.