Skip to main content

"அதிமுக தோற்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

edapadi palanisamy talks about erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய, தேர்தல் பணிக்குழு அமைக்க எனப் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க ஈரோட்டுக்கு நேற்று நேரில் சென்றார் அதிமுக எடப்பாடி பழனிசாமி.  ஈரோடு பகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து இன்று மாநில அளவிலான நிர்வாகிகளை ஈரோட்டுக்கு அழைத்து தேர்தல் ஆய்வுக் கூட்டமும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டியல் விவரங்களையும் நேரிலேயே கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது இக்கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, "இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி நமது உழைப்பினை செலுத்தி சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய சரித்திர வெற்றியை நாம் பெற வேண்டும்.

 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே தெரியவில்லை என்று  சிலர் சொல்கிறார்கள். இன்னும், நான்கைந்து நாட்களில் பாருங்கள்., கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுக கரைவேட்டி கட்டியவர்கள் மட்டுமே தெரிவார்கள். அதிமுக வீரர்கள், வீராங்கனைகள் ஆங்காங்கே முகாமிட்டு மக்களைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றிக்கு உழைப்பார்கள். அதை எதிரிகள் புரிந்து கொள்வார்கள். அதிமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என இன்னும் பலர் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுக தோற்ற வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நம்மை நாம் தான் தோற்கடிக்க முடியும். வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.

 

நமக்குள் உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளை உள்ளத்தில் இருந்து பிடுங்கி எறிந்து விட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். உழைப்பு, தியாகம் இருந்தால்தான் வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையை அடைய முடியும்.  எல்லா கட்சியிலும் பிரச்சனை உள்ளது. திமுகவில் உச்சகட்ட பிரச்சனை உள்ளது. ஆனால், இரு பெரும் தலைவர்கள் இல்லாமல், இவ்வளவு பெரிய கூட்டம் அதிமுக மட்டுமே கூட்ட முடியும்.  உழைக்கும் தொண்டர்கள் ஒன்றிணைந்து, தடைகளை தகர்த்தெறிந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.