Skip to main content

“ஷாக் அடிப்பது - மின்சாரமா? மின்கட்டணமா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
mk stalin

 

திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மின் கட்டணம், கொரோனா தடுப்பு நடவடிக்கை  உள்ளிட்டவை குறித்து வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

 

வீடியோவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், 

 

ஒருபக்கம் கரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.

 

இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கைத் தளர்த்தினார்கள்; மதுக்கடைகளைத் திறந்தார்கள்; பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை!

 

மார்ச் 25-ம் தேதியிலிருந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். மத்திய தர வர்க்கத்தினர், ஏழை - எளிய குடும்பங்கள், சிறு குறு தொழில் செய்கிறவர்கள் யாருக்கும் வேலை இல்லை; வருமானம் இல்லை; தொழில் இல்லை; வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்!

 

அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்கிறேன். என்னுடைய எல்லா அறிக்கைகளிலும் சொன்னேன். முதலமைச்சர் கேட்கவுமில்லை; செய்யவும் இல்லை; மக்களுக்குத் தரவும் இல்லை!

 

இந்தச் சலுகை எல்லாம் தராத முதலமைச்சர் மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்கின்றார். மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும்தான் போடப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30-ம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?

 

ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள்.

 

சில உதாரணங்களை மட்டும் காட்டுகிறேன்.

 

சிலருடைய மின்கட்டண அட்டைகள் என்னிடம் இருக்கிறது.

 

எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா?

 

ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா?

 

"நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்" என்று சொல்கிறார்கள்.

 

வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது?

 

இல்லையென்றால், தண்டனையா?

 

வீட்டில் இருந்தது தவறா?

 

மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும்.

 

ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

 

இது எல்லாவற்றிற்கும் பழனிசாமியின் ஆட்சிதான் காரணம். முதல் நாளிலிருந்து சரிவர நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் உங்களுக்குள் அரசியல் செய்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகளை மாற்றிக் கொண்டே வருகிறீர்கள். பின்னர், "மக்கள் பொறுப்பாக இல்லை. வெளியில் சுற்றுகிறார்கள்" என்று அவர்கள் மேலே பழியைப் போட்டீர்கள்.

 

இப்போது மறுபடியும் மக்கள் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள்

 

எப்போதுதான் ஆட்சியாளர்களிடம் தெளிவு வருமோ என்று தெரியவில்லை?

 

"தவறான அடிப்படையில் மின்சார ரீடிங் எடுத்திருக்கிறார்கள்" என்று மக்கள் சொல்கிறார்கள்.

 

இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும்.

 

இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும்.

 

சாதாரண நேரம் இல்லை இது; கொரோனா காலம்!

 

எல்லா விதத்திலும் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.

 

இதில் பழனிசாமி அரசாங்கமும் தன் பங்குக்கு மக்களை வதைக்கிறது.

 

மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தான் மின்சார வாரியமே இயங்குகிறது.

 

நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது.

 

இப்போது பழனிச்சாமி அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்!

 

சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையாக கட்டணச் சலுகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

 

கேரள மாநிலத்தில் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள்.

 

மகாராஷ்டிராவில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள்.

 

மத்திய பிரதேசத்தில் கட்டணச் சலுகை கொடுத்திருக்கிறார்கள்.

 

இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

 

பணம் இல்லையா?

 

நிதி நிலைமை சரியில்லையா?

 

கஜானா காலியாக இருக்கிறதா?

 

எது உண்மை? அதைச் சொல்லுங்கள்!

 

நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால், மக்களுக்குச் சலுகை தருவதற்கு மனமில்லையா?

 

மக்களைக் காப்பாற்றுவது தானே அரசு!

 

இதுவரை நாங்கள் சொன்ன மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை.

 

ஏனென்றால், மக்களைக் காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை. அதுதான் உண்மை!

 

கொரோனா பரவும் முன் தடுக்கும் முன்யோசனையும் இல்லை; கொரானா பரவாமல் தடுக்கும் ஆக்கபூர்வமான எண்ணமும் இல்லை! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் இரக்க குணமும் இல்லை!

 

கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் சுயநலம் மட்டும்தான் இன்றைய முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கிறது.

 

மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்

 

நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசங்களுடன் முழக்கங்களை எழுப்புவோம்!

 

"கொரோனோ காலத்திலும் கொள்ளை அடிக்காதே!"

 

"மின் கட்டணத்தில் சலுகை கொடு! மக்கள் வாழ்க்கைக்குக் கைகொடு!"

 

"மக்களைக் காக்கும் அரசா? மக்களிடமிருந்து பறிக்கும் அரசு?"

 

- என்று முழக்கம் எழுப்புவோம். மக்கள் மனங்களை மதிக்காமல் கோட்டையில் பதுங்கியிருக்கும் முதலமைச்சரைப் பணிய வைப்போம்; பணி முடிப்போம். இவ்வாறு உரையாற்றினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.