Skip to main content

“ராஜ்யசபா சீட் தருவதாகப் பேசப்பட்டது” - துரைவைகோ

Published on 31/05/2025 | Edited on 31/05/2025

 

 Durai Vaiko says There was talk of giving me a Rajya Sabha seat

தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. 

இந்த சூழ்நிலையில் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, திமுக சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம சார்பில் நடிகரும், ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசனும் போட்டியிடவுள்ளனர். 

இந்த நிலையில், மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் தருவதாக திமுக தெரிவித்தது என மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சீட் எண்ணிக்கை என்று வரும் போது எங்களுக்கு கடந்த முறை கொடுத்த மாதிரி ஒரு மக்களவை உறுப்பினர் பதவியும், மாநிலங்களவை பதவியும் கொடுப்பதாகப் பேசப்பட்டது. அதை அறிவிக்கலாம் என்று சொல்லும் போது, வைகோவின் பதவி காலம் மேலும் ஒன்றேகால் ஆண்டு இருக்கிறது, அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக செய்வார் என்று சொன்னார்கள். வைகோவிற்கு என்றால் முதலமைச்சர் செய்யாமல் இருக்கமாட்டார் எனக் கூறினார்கள். அதை ஏற்றுக் கொண்டு தான் இருந்தோம், இப்போதும் கூட்டணியில் தொடர்கிறோம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 

பொன்குடம் உடைந்தாலும் அது பொன்குடம், பொன்குடம் தான். மூன்று முறை ஒன்றிய அமைச்சர் பதவி அந்த வாய்ப்பு வந்த பொழுது அதை மறுதளித்த அரசியல் அதிசயம் வைகோ ஆவார். மக்கள் பணி, மக்கள் தொண்டே பொதுவாழ்க்கையின் அடிப்படை பண்பு என்று செயல்பட்டு வரும் மதிமுக என்ற உன்னதமான இயக்கத்திற்கும் அதன் தலைவர் வைகோவிற்கும் பதவி ஒரு பொருட்டல்ல.  எங்கள் மக்கள் பணி தொடரும்.  திராவிட இயக்க போர்வால் தொடர்ந்து சுழலும். தமிழ்நாட்டின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும், இதையும் கடந்து செல்வோம்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்