Skip to main content

எதற்கும் ஒரு எல்லை இல்லையா? கி.வீரமணி கண்டனம்!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

 

தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்; ஆனால், தமிழ்நாட்டில்? வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
 

காற்றை விதைத்துப்  புயலை அறுவடை செய்கிறது!
 

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மூவகை குடியுரிமைத் திருத்தச் சட்டங்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, வழமைபோல் நடத்தாமல் புதுக்கரடி ஆர்.எஸ்.எஸின் கொள்கை அஜெண்டாவை அமலாக்கும் நோக்கத்தோடு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக நடத்தி, காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்கின்றது மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு.

 

diiravidar kalagam



 

அமைதியாக இருந்த நாட்டின் நாலாபகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை, பாதிக்கப்படும் அனைவரும் ஜனநாயக வழியில் - அறப்போராட்டத்தை ஆண் - பெண் சகலரும் திரண்டு வரலாறு காணாத - வன்முறையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!
 

துப்பாக்கிச் சூடு கலாச்சாரம்
 

இந்த கட்டுக்கோப்பைக் குலைக்க திட்டமிட்டே சில காலிகளை - தனி நபர்களை ஏவிவிட்டு கலவரங்களை - துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் (அமெரிக்காவில் இருக்கும் நோய்போல) இங்கும் பரவிடும் வேதனையான நிலை, விபரீதம் ஏற்பட்டு வருகிறது.
 

பல்கலைக் கழக மாணவர்களின் விடுதிக்குள் - டில்லியில் தனியார்களான குண்டர்களை முகமூடி அணிந்து அதீதமாக மாணவர்களைத் தாக்கியதற்கு சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகள் சில தொலைக்காட்சி ஊடகங்களில்கூட வெளிவந்தன.
 

இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?
 

20 உயிர்கள் பலி; ஆழ்ந்த இரங்கல்
 

வடகிழக்கு டில்லி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக வன்முறை - வெறியாட்டம் (திட்டமிடப்பட்டு தூண்டி விடப்படுகிறதோ என்று சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது) காரணமாக 150 பேருக்குமேல் காயம்; 20 உயிர்கள் பலி என்ற கோரத்தின் தாண்டவம் காட்சியளிப்பது வேதனை; ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இராணுவத்தை வரவழைக்கச் சொல்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்; இதுதான் மத்திய ஆளுமையின் வெளிப்பாடு.
 

டில்லியின் காவல்துறை, சட்டம் - ஒழுங்கு பொறுப்பு - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. (மாநில அரசு பங்கு என்பது வெகு வெகுக் குறைவே!)
 

இன்று காலை டில்லியில் உள்ள உயர்நீதிமன்றம் - காவல்துறை அதிகாரிகளை நேரில் வரவழைக்க ஆணை பிறப்பித்துள்ளது!
 

விசாரணை நடக்கிறது. தூண்டி விடுகிறார்கள் எதிர்க்கட்சியினர் என்பது பொறுப்பற்ற குற்றச்சாற்று. மக்களின் தன்னெழுச்சி என்பது வெளிப்படை.

 

பழியைத் துடைத்த பீகார் சட்டமன்றம்
 

ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற லோக் தளக் கட்சி - அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் கட்சி, நிதிஷ்குமாரின் பீகார் ஆட்சி, என்.பி.ஆர்.அய் எதிர்த்து, ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பழியைத் துடைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில்.... சொல்ல வெட்கமாகுது; காரணம் வெளிப்படை.

இன்று ஒரு அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம்போல, டில்லிக்கு ஜால்ரா அடிப்பது உண்மைதான் என்று, பல நேரங்களில் வசதியற்ற உண்மைகளை வாய் தவறிக் கூறிடும் அமைச்சர் என்பதால், வெளிப்படையாகக் கூறுகிறார்!


எதற்கும் ஒரு எல்லை இல்லையா?

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம்!

அம்மா ஆட்சி என்பது உண்மையானால், இப்படி டில்லியே சரணம் என்று சத்துணவு திட்டத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் தருவார்களா? எதற்கும் ஒரு எல்லை இல்லையா?
தமிழ்நாடு மக்கள் தீர்ப்பளிக்கக் காத்திருக்கிறார்கள் என்ற கவலை மத்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டாமா?

வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து, துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - மக்கள் மன்னித்தால்கூட - மறவாதீர்!

இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“திராவிடர் கழகம் தான் எனக்கு தாய் வீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dravidar Kazhagam is my mother's house says CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

 

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.