Skip to main content

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே! கி.வீரமணி 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
K. Veeramani



கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் முக்கிய கடமையாகும்; அமைச்சர்களின் எண்ணிக்கை, துறைகளின் எண்ணிக்கையை குறைத்திடுக; தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிப்பதில் முக்கிய கவனம் தேவை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.  
 

அறிக்கை வருமாறு:
 

பொருளாதார வறட்சி என்ற பேரபாயம்!
 

கரோனாவின் பாதிப்பு மக்களுக்குத் தொற்று, நோய்க் கொடுமை, பலியாவது போன்ற கொடுமைகள் ஒருபுறம்; ஆனால், அதன் தவிர்க்க இயலாத விளைவுகள், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்பட பல்துறைகளையும் அதல பாதாளத்தில் பொருளாதார வறட்சி என்ற (Depression) நிலைக்குத் தள்ளும் பேர பாயம் மறுபுறம் உள்ளது.
 

மத்திய - மாநில அரசுகள் இதனை எப்படி எதிர்கொண்டு நிதி நிலைமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் சீரடையச் செய்யப் போகின்றன என்பது நாட்டோர் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்!
 

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் எப்படி யார், யாருக்குப் பயனளிக்கும் என்று நிபுணர்களும், தலைவர்களும், அரசியல் பொருளியல் அரங்கில் உள்ள மேதைகளும் ஆராய்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
 

அறிவித்துள்ள தொகைகள் எங்கிருந்து, எப்படிப்பட்ட நிதி ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் (Financial Sources) என்பது விளக்கப்படவில்லையே என்பது ஒரு விவேகமுள்ள கேள்வியாகும்!
 

தமிழக அரசின் கவனத்திற்கு....
 

மத்திய - மாநில அரசுகளின் வருமான நிதி வரவுகள் சுருங்கிவிடும் நிலையில், அதிலும் மாநில அரசின் நிலையோ பெரும் வருவாய் இழப்பை சமாளிக்கக் கூடிய மிக மிக இக்கட்டான நிலையில் உள்ளதால், ஏற்கெனவே பெரிய பதவிகளை வகித்து, பல இக்கட்டான நெருக்கடிகளில் முந்தைய அரசுகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற நிர்வாகப் பெருமக்களின் கருத்துகளை கேட்டுத் திரட்டியுள்ளவற்றை நாம் தமிழக அரசின் கவனத்துக்கும், செயலாக்கத் திற்கும், பரிசீலனைக்கும் வைக்க விரும்பு கிறோம்.
 

நிதி ஆதாரங்களைப் பற்றி ஆராய்ந்து, பரிந்துரைகளைத் தர மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட ஒரு குழுவைத் தமிழக அரசு போட்டு, அவர்கள் தங்களது பணியையும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு ஆராய்ந்து செயல்பட இந்தக் கருத்துரைகள் பெரிதும் பயன்படக்கூடும்.
 

மத்திய அரசுடன் போராடியாவது  விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்
 

‘ஹெல்த் கேர்’ என்ற மக்கள் நல்வாழ்வுப் பிரிவை மேலும் விரிவாக்கிட - அதன் அடிக்கட்டுமானமாகிய மருத்துவர்கள் எண்ணிக்கை, செவிலியர்கள், லேப்டெக்னீஷியன்கள் உள்ளிட்டோரை அதிகப்படுத்தி, வசதிகளைப் பெருக்கி பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு நிதிப் பெருக்கத்தை அளிக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.


செவிலியர்கள் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இடங்களில், நீட் தேர்வு போன்ற முறைகளைத் தவிர்த்து, நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்ப்பு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு விடு வதன்மூலம் - கரோனா போன்ற தொற்றுகள் - பொது நோய்கள் தடுப்புக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அடிக்கட்டுமானம் வலுப்பெறவும் செய்ய முடியும். மத்திய அரசுடன் போராடியாவது விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்.
 

மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மற்ற பல்கலைக் கழகங்களில், மருந்தியல் துறைகளில் ஆராய்ச்சி பெருக, ஊக்கப்படுத்த - பல்வேறு தகுதியுள்ள பல்கலைக் கழகங்களுக்கு உதவி, செயல் ஊக்கம் தர, முடிவை எதிர்நோக்கிய (Result Oriented) திட்டம் தீட்டவேண்டும்.
 

கரோனா ஊரடங்கால் தொழிற்கூடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மாற்றும் வகையிலும், போதிய உதவிகளை அதன் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் மாநில அரசு தரவேண்டும்.
 

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் பதில், இங்குள்ள வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர்களை, அனைத்து வேலைகளுக்கும் பயிற்சி அளித்து ஒரு தெளிவான Labour force  உருவாக்கிடத் திட்டமிட்டு, உடனடியாக உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அப்பணிகளைத் தொடங்கவேண்டும்.
 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியம்!
 

அரசுப் பணிகள் - கட்டுமானப் பணிகள் - சாலைகள் செப்பனிடுதல் - சீரமைத்தல் போன்ற பணிகளில் தொடங்கி, கணினி தொழில்நுட்பப் பணிகளுக்குப் பயிற்சி அளித்து பல துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியமாகும்!
 

வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் எந்தத் தொழில்நிறுவனமும் அவர்களது தங்கும் வசதி உள்பட பலவற்றை கண்காணிக்கும் வகையில் சட்டத் திருத்தம்தான் தேவை.

 

nakkheeran app

 

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே!
 

எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம்  (Austerity measures)
 

1. முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே!
 

இதனால் பல வகையில் நிதிச் செலவு பலவும்கூட (பி.ஏ.,க்கள், காவலர்கள், வீடுகள்) குறையும் வாய்ப்பு ஏற்படும்.
 

அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் தேவை. மேல் வகுப்புகள் தருவதைக் குறைக்கலாம்.
 

தேவையற்ற பல கமிஷன்கள் போட்டு, வேலை செய்யாமலே பல மாதங்களுக்கான சம்பளம் பெறுவது போன்று, மக்களின் வரிப் பணம் வீணாகும் நிலை இப்போது!
 

பலப்பல கமிஷன்கள் -  புதிய நியமனங்கள் தேவையில்லை!
 

உதாரணத்திற்கு ஜெயலலிதா அவர்களது மரணம்பற்றி ஆராயும் கமிஷனால் என்ன பயன்? இப்போது அது செயல்படாத நிலையில், அதனை முடித்து வைக்கலாம். (Wind up all the Unnecessary Commissions) அதுபோல, பலப்பல கமிஷன்கள் உள்ளன. இனி புதிய நியமனங்கள் தேவையில்லை.
 

அரசு இலாக்காகளைக் குறைப்பதுபற்றியும் ஒரு சீர்மை ஏற்படுத்த, ஒரு சிறு குழு அமைத்து உடனடியாக அதன் பரிந்துரை களுடன்,  தேவையற்று பெருகிய துறைகளைக் குறைத்து, அதில் பணிபுரிகிறவர்களை மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தி - வெளியே அனுப்பாமல் செய்யலாமே!
 

கரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில், எப்படி திருமணங்களுக்கு 20, 30 பேருக்குமேல் கூட வேண்டாம் என்று கட்டுப்படுத்துகிறீர்களோ, அதுபோல், தேவையற்ற அரசு நிகழ்வுகளை நடத்தாமல், குறிப்பிட்ட துறைகள், குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்குரிய Monitoring Cell  என்ற கண்காணிப்புக் குழுக்களை - ஏற்கெனவே உள்ள அதிகாரிகளையே பொறுப்பாளர்களாக்கி செய்யலாம்.
 

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள் 478).
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.