Skip to main content

திமுக கொடுத்த அழுத்தம் - வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

சென்னைக்கு கடந்த முறை ராகுல் காந்தி வந்திருந்தபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதும் கட்சிப்பாகுபாடின்றி எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது. அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு அமைத்தவுடன், மீண்டும் ராகுலை தொடர்பு கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டில் இது முக்கியமான பிரச்சனை, மேலும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடிய விஷயங்கள். இதனை நீங்கள் கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், இதனை நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையே ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தியுள்ளார். 

அதற்கு ராகுல், கண்டிப்பாக இதனை தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் முதலில் செய்யக்கூடிய பணிகளில், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். 

 

rahul gandhi mk stalin



இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி  மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அந்த தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வுக்கு இணையாக மாநிலங்கள் மருத்துவத்துக்கு தனியாக தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். பள்ளிக்கல்வி மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படு்ம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 

திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே நீட் தேர்வில் விலக்கு மற்றும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது திமுக வட்டாரங்கள். 
 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே மக்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.