Skip to main content

தி.மு.க.வின் புதிய பொருளாளர்?

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

 

dmk

 

கலைஞரின் மறைவையடுத்து, தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராகிறார்.  வரும் 28ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அவர் முறைப்படி தலைவராகத் தேர்வு பெறவுள்ள நிலையில், அவரிடம் கூடுதல் பொறுப்பாக உள்ள பொருளாளர் பதவி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பும் போட்டியும் அதிகரித்துள்ளது.

 

பொருளாளர் பதவிக்கு  கே.என்.நேரு, பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களின் பெயர்கள் நீண்ட காலமாகவே அடிபடுகின்றன. இதற்காக இவர்களுக்குள் பலத்த போட்டி நிலவுவது குறித்த செய்திகளும் வெளியானபடி உள்ளன.

 

மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, கலைஞரின் மரணத்திற்குப் பிறகு தனது ஒவ்வொரு நகர்வுக்கு முன்பும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனில் தொடங்கி மூத்த பிரமுகர்களிடம் ஆலோசிக்கிறார். இதனைத் தொடர்ந்து துரைமுருகன், ரகுமான்கான் போன்ற மொழிப்போராட்டக் கள முன்னணியினருக்குத் தரவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

 

பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வடமாவட்டத்தைச் சேர்ந்த சீனியருக்கு பொருளாளர் பதவி எனத் தீர்மானித்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். அந்தப் பதவியை எதிர்பார்த்த மற்றவர்களுக்கு கட்சியில் வலிமையான வேறு பதவிகளை முறைப்படி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

“10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை” - ஆ.ராசா பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
a. rasa said India is not safe for 10 years because of Modi

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய ஆ.ராசா, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று, சென்னை பெருவெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என மூன்று சவால்களையும் எதிர்கொண்டார். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி 4 ஆயிரம் வழங்கினார்.

அதேபோல், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை டெல்லியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து பேசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், தொடர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாதத்தையும், சாம்பாரையும் கொடுத்து மதிய உணவு திட்டத்தை காமராஜ் செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர்,  காயையும்,  பருப்பையும் போட்டு சத்துணவு என்று ஆக்கினார். அது உண்மையான சத்துணவு என்று சொல்ல முடியாது. ஆனால், வாரத்தின் ஏழு நாட்களிலும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவாக மாற்றியவர் கலைஞர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை சிற்றுண்டியையும் வழங்கி வருகிறார். இப்படி பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக முதல்வர் தான் உங்களிடத்திலே பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அருண்நேருவை நிறுத்தி இருக்கிறார். ‘உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்’ என காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். எதற்காக அழைக்கிறார் என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை என்பதற்காகத் தான், காப்பாற்ற அழைக்கிறார். குரங்கு கையில் கிடைத்த பூ மாலையைப் போல, கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. இந்தத் தேர்தல் அருண் நேருவுக்கான தேர்தலோ? ராஜாவுக்கான தேர்தலோ? அல்ல. பெரம்பலூருக்கான தேர்தலோ, தமிழ்நாட்டிற்கான தேர்தலோ அல்ல. இந்தத் தேர்தல் இந்தியாவுக்கானது. அரசியல் சட்டம் இருக்க வேண்டுமா? வேணாமா? அரசியல் சட்டம் இல்லை என்றால், இந்தியா உடைந்து விடும். ஆனால் மோடி சொல்கிறார் நான் மீண்டும் வந்தால், அரசியல் சட்டம் இருக்காது.

ஒரே மதம், ஒரே மொழி. அதுவும் இந்தி தான் இருக்கும். ஒரே உணவு, ஒரே உடை, ஒரே தேர்தல் என்று சொல்கிறார். எனவே இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டிட பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். 

இதே போல, ஆ.ராசா அரும்பாவூர், லாடபுரம், செட்டிக்குளம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார். அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரும்பாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் கலந்து கொண்டனர். அருண்நேருவின் அம்மா பிறந்த ஊர் அரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சேகோ பேக்டரியும், ஆலத்தூர் ஒன்றியத்தில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் கொண்டுவருவதாக தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் என திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.