Skip to main content

திமுகவின் மாபெரும் திட்டம்; கலைஞரின் நூற்றாண்டு துவங்குவதற்குள் செயல்படுத்த முயற்சி

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

DMK's grand scheme; An attempt to implement the centenary of the artist

 

“ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. இந்த பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 3, 2023 கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் ஜூன் 3ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கொண்டாடுவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தில், முத்தமிழ் அறிஞர், 95 ஆண்டுக்கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வறியா போராளி; போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனை நாயகர்; தாய்த்தமிழ் நாட்டினை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த தலைசிறந்த நிர்வாகி தலைவர் கலைஞருக்கு வரும் சூன் - 3 ஆம் நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கலைஞர் 1924 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாள் திருக்குவளையில் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் இயற்கை நம்மிடம் இருந்து அவரைப் பிரித்தது. அன்று முதல் கலைஞரின் கனவுகளை நிறைவேற்ற தினமும் நாம் பணியாற்றி வருகிறோம்.

 

'பணியைத் தொடங்கிவிட்டாயா? வெற்றிக்கு திட்டமிட்டுவிட்டாயா?' என்று 'முரசொலி'யில் கலைஞர் அவர்களே எழுதிக் காட்டியதைப் போன்ற உத்வேகத்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உழைத்து வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம். ஆறாவது முறையாக தாய்த்தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வார்ப்பாக மட்டுமல்ல, தலைவர் கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.

 

'சொன்னதைச் செய் - செய்வதைச் சொல்' என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய நாட்டில் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக்கு கொண்டு சென்று மகுடத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும் - கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வருவது மிக மிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

 

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த நம் கழகத்தை மேலும் வலிமைப்படுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திடுவோம்.

 

கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் சூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை; கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும் இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள். தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.  வரும் சூன் 3 ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் - 3 வரை ஓராண்டு காலம் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

 

தமிழ் மொழிக் காப்பு - தமிழின உரிமைகள் - தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம் - மதச்சார்பின்மை - சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் – சமூக நீதி - பெண்ணுரிமை - இலக்கிய வளர்ச்சி - கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார். 

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.