DMK won union chairmanship at the initiative of MLA!

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

Advertisment

உத்தமபாளையம் ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி இருந்தார். ஆனால், தலைவரின் செயல்பாட்டின் மீது அதிமுக திமுக உள்பட 10 கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்துவந்தனர். அதன் அடிப்படையில் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததன் எதிரொலியாக ஒன்றியத் தலைவர் பதவியை ஜான்சி ராஜினாமா செய்தார்.

Advertisment

அதைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக துணைத்தலைவர் மூக்கம்மாள் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தது. இந்த நிலையில் தான் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாமரைச்செல்வன் தேர்தல் அதிகாரியாக இருந்தார். பி.டி.ஓ.க்கள் ஜெயகாந்தன், செண்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆளும் கட்சி கவுன்சிலர் இன்பென்ட்பனிமய ஜெப்ரின் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் திமுக கவுன்சிலர் 6 பேர் மட்டும் பங்கேற்றனர். அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் துணைத் தலைவர் மூக்கம்மாள் உள்பட மூன்றுபேர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வெளியேற்றினர். முன்னாள் தலைவர் ஜான்சி கூட்டத்திற்கு வரவில்லை.

வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் திமுகவைச் சேர்ந்த இன்பென்ட் பனிமய ஜெப்ரின் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிமுக வசமிருந்த ஒன்றியத் தலைவர் பதவியை தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் முயற்சியால் திமுக கைப்பற்றியிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஒன்றியத் தலைவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதோடு நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.