Skip to main content

ஓட்டுக்கேட்டு போன இடத்தில் வேட்பாளரின் அதகளம்!

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

தேர்தல் வந்துவிட்டாலே திருவிழா தான். வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர்களை கவர மக்களின் சேவகன் என்பதை காட்டிக்கொள்ள விதவிதமாக தங்களை வெளிப்படுத்துவார்கள். பெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட ரோட்டில் உட்கார்ந்து டீ சாப்பிடுவது, டீ கடையில் அமர்ந்து பொதுமக்களுடன் டீ சாப்பிடுவது, வாக்கிங் போவது, காய்கறி கடையில் குறை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள், யாரென்றே தெரியாதவரின் சாவுக்கு கூட முதல் ஆளாக போய் நிற்பார்கள். வராத கல்யாண பத்திரிக்கையை வந்ததாக எடுத்துக்கொண்டு போய் கனமாக மொய் எழுதுவார்கள். கோயில் திருவிழாவுக்கு வாரி வழங்குவார்கள், நடக்காத விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள்.

 

அவர்களே அப்படியென்றால் உள்ளாட்சியில் வார்டு தேர்தல் என்றால் எப்படி கலைக்கட்டும்?

 

தினம், தினம் பார்க்கும் மக்களை கவர கவுன்சிலர் வேட்பாளர்கள் விதவிதமாக தங்கள் தெருக்களை சுற்றிச் சுற்றி வந்து வாக்கு கேட்கிறார்கள். அப்படித்தான் வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் ஒருவர் விதவிதமாக வாக்கு கேட்கிறார்.

 

வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா. உழைக்கும் அடிதட்டு மக்கள் வசிக்கும் பகுதியான மக்கான் அம்பேத்கார் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மீன்கடையில் மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து மீன் கடைக்காரரை ஒதுங்கவைத்துவிட்டு மீன்களை எடைப்போட்டு, விற்பனை செய்து அந்த தொகையை கடைக்காரரிடம் தந்தார்.

 

அதேபோல் டீ கடையில், டீ போட்டு கொடுத்தும், பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி எடுத்துக் கொடுத்தும், அவர் அங்கிருந்த மக்களிடம் மறக்காமல் உதயசூரியனில் வாக்களிங்க, என்னை வெற்றி பெறவையுங்கள். ஜெயிச்சதுக்கப்புறம் அக்காவை பார்க்க முடியுமா என சிலர் முனுமுனுக்க, நீங்க இருக்கற தெருவுலதானே நானும் இருக்கேன், எப்பவும் என் வீட்டு கதவை தட்டலாம் என்றும் உங்கள் வீட்டு பெண்ணாக இருந்து உங்களுக்கு சேவை செய்வேன் என்று டச்சாக பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.