தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர், மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பியிருப்பது தி.மு.க.வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த அமைச்சர் சு.முத்துச்சாமியின் செயல்பாடுகளில் தொடக்கத்திலிருந்தே இரு தரப்புக்கும் முரண்பாடுகள் இருந்து வந்தது. சென்ற சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தனது தோல்விக்கு அத்தொகுதியில் உள்ள கொடுமுடி ஒன்றிய செயலாளர் சின்னகுட்டி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் இருவரும் தான் முக்கிய காரணம், இந்த இருவரும் மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் முத்துச்சாமியின் ஆதரவாளர்கள். தன்னை தோற்கடிக்க முத்துச்சாமி பயன்படுத்திய நபர்கள் தான் இவர்கள். இந்த இருவரின் செயல்பாடுகளால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவர்களுக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்க கூடாது என கட்சி தலைமையிடம் சுப்புலட்சுமி வேண்டுகோள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சுப்புலட்சுமியின் வேண்டுகோளை ஏற்று இருவருக்குமான ஒ.செ.பதவி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடீரென சென்ற மாத இறுதியில் அந்த இருவரையும் மீண்டும் ஒ.செ.க்களாக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கடும் வேதனையடைந்த சுப்புலட்சுமி கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்வதாக கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார் எனவும், சுப்புலட்சுமி தரப்பு நியாயத்தை கட்சி தலைமை கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.